கஜகஸ்தான்:
ஹிஜாப் அணியாமல் செஸ் விளையாடிய ஈரான் வீராங்கனைக்கு நாடு திரும்ப கூடாது என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

ஈரான் நாட்டை சேர்ந்த செஸ் விளையாட்டு வீராங்கனை சாரா காதெம் (வயது 25). அண்மையில் கஜகஸ்தான் நாட்டின் அல்மேட்டி நகரில் நடந்த சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டியில் சாரா காதெம் கலந்து கொண்டு விளையாடினார்.

அவர் விளையாடும்போது, பர்தா அணியவில்லை என கூறப்படுகிறது. ஈரான் நாட்டு அரசு சட்டத்தின்படி, ஹிஜாப் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சாரா காதெம்முக்கு ஏராளமானவர்களிடமிருந்து செல்போனில் வழியே கொலை மிரட்டல் அழைப்புகள் வந்துள்ளன.

அவர் நாட்டுக்கு திரும்பி வர கூடாது என்று போனில் மிரட்டப்பட்டார்.

இதனிடையே சிலர் சாரா காதெம் நாடு திரும்ப வேண்டும் என்றும் எந்த பிரச்னையாக இருந்தாலும் அரசிடம் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கலாம் என்றும் கூறியுள்ளனர்.

இதனால் சாரா காதெம் பயந்து போய் இருக்கிறார்.

ஈரானில் வசிக்கும் சாராவின் பெற்றோருக்கும் மிரட்டல்கள் விடப்பட்டு உள்ளன எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதைத் சாரா ஸ்பெயின் நாட்டுக்கு தப்பியோடியுள்ளார். எனினும், இந்த விவகாரத்தில் ஈரான் வெளியுறவு அமைச்சகம் எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை.

ஈரானில் கடந்த ஆண்டு செப்டம்பரில் அமினி என்ற 22 வயது இளம்பெண் ஹிஜாப் சரியாக அணியாததற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அதற்கடுத்த 3 நாட்களில் போலீஸ் காவலில் அவர் உயிரிழந்தது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் அரசுக்கு எதிரான போராட்டமும் வெடித்தது.

இந்நிலையில் சாரா காதெம் ஈரான் திரும்பினால் அவருக்கும் இதேநிலை ஏற்படலாம் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.