சென்னை: சென்னையில் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

தேசிய அளவில் மகாராஷ்டிராவில் தான் கொரோனா தொற்று அதிகம் காணப்படுகிறது. அதற்கு அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளது. டெல்லி, குஜராத்,உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் கொரோனா தொற்று அதிகம்.

தமிழகத்தில் பொதுமக்களை போன்று அரசு துறைகளில் உள்ளவர்களும் கொரோனவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை காவல்துறையை பொறுத்த வரை இதுவரை 700க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறது.

இந் நிலையில் சென்னையில் ஐபிஎஸ் பெண் அதிகாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்து. டிஐஜி அந்தஸ்தில் அந்த அதிகாரி, காவல் இணை ஆணையராக உள்ளார்.

அவருக்கு லேசான அறிகுறி இருப்பதால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கூடுதல் ஆணையர், துணை ஆணையர்கள் இருவர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ளனர். இதையடுத்து எச்சரிக்கையுடன் பணியாற்றுமாறு ஆணையர் விஸ்வநாதன் அறிவுறுத்தி உள்ளார்.