மொகாலி:

பிஎல் தொடரில் ராஜஸ்தான் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்ற லீக் ஆட்டத்தில், பஞ்சாப் அண 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேற்று இரவு மொகாலியில் ஐபிஎல் தொடரின் 32வது லீக் ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.  டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பஞ்சாப் மட்டையுடன் களமிறங்கியது.

பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்ககாரர்களாக  கிறிஸ் கெயில், ராகுல் களமிறங்கினர். அதிரடியாக ஆடிய கெயில் 3 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 30 ரன்களுடனும், அவருக்கு பின் வந்த மயங்க் அகர்வால் 2 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 26 ரன்களுக்கும் அவுட்டாகினர்.

லோகேஷ் ராகுல்-டேவிட் மில்லர் இணை நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டது. ராகுல் 47 பந்தில் 2 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 52 ரன்களை விளாசிய ராகுல், உனதிகட் பந்துவீச்சில் அவுட்டானார்.

தலா 2 சிக்ஸர், பவுண்டரியுடன் 27 பந்துகளில் 40 ரன்களை விளாசிய மில்லர், குல்கர்னி பந்துவீச்சில் வெளியேறினார். அவர்களுக்கு பின் வந்த நிக்கோலஸ் பூரன் 5, மந்தீப் சிங் 0 என வெளி யேறினர்.
கேப்டன் அஸ்வின் 2 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 17 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார். 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்களை சேர்த்தது பஞ்சாப்.

ராஜஸ்தான் தரப்பில் ஆர்ச்சர் 3-15 விக்கெட்டுகளையும், குல்கர்னி, உனதிகட், சோதி தலா 1 விக்கெட்டையும் சாய்த்தனர். ராகுல் இந்த ஆட்டத்தில் தனது 14-ஆவது ஐபிஎல் அரைசதத்தை பதிவு செய்தார்.

இதையடுத்து 183 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.  தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜோஸ் பட்லர் 23, சஞ்சு சாம்சன் 27, ரஹானே 26, ஜோஃப்ரா ஆர்ச்சர் 1 என சொற்ப ரன்களுக்கு  அடுத்தடுத்து வெளியேறினர். தொடர்ந்து  ராகுல் திரிபாதி 50 ரன்களுடன் தனது 4-ஆவது ஐபிஎல் அரைசதத்தை பதிவு செய்தார்.  அஷ்டன் டர்னர், ஷிரேயஸ் கோபால் ஆகியோல் கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினர். ஸ்டுவர்ட் பின்னி இறுதியில் 3 சிக்ஸர், 1பவுண்டரியுடன் போராடி 33 ரன்களை விளாசினார்.

இறுதியில் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு ராஜஸ்தான் 170 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் காரணமாக பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பஞ்சாப் தரப்பில் அஸ்வின் 2 விக்கெட்டை வீழ்த்தினார். அதையடுத்து ஆட்ட நாயகனாக அஸ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.