2023 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ரவீந்திர ஜடேஜா விளையாடுவார் என்று சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஐபிஎல் 2022 போட்டியின் போது சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகியதை அடுத்து ரவீந்திர ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

அந்த சீசனில் ரவீந்திர ஜடேஜா தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை இதனால் அணியின் கேப்டன் பதவியில் இருந்து அவரை தூக்கிவிட்டு தோனியை மீண்டும் நியமித்தது நிர்வாகம்.

இதனை அடுத்து ஜடேஜா-வுக்கும் சிஎஸ்கே நிர்வாகத்துக்கும் மோதல் முற்றியது.

ஜூலை மாதம் தோனி பிறந்தநாளுக்கு சிஎஸ்கே அணி சார்பில் வெளியான பிறந்தநாள் வாழ்த்து வீடியோவில் ஜடேஜா தவிர மற்ற அனைத்து வீரர்களும் இடம்பெற்றிருந்தனர்.

இந்த நிலையில், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் சிஎஸ்கே அணியை பின்தொடர்வதில் இருந்து வெளியேறினார் ஜடேஜா.

ஜடேஜா மற்றும் சிஎஸ்கே நிர்வாகத்திற்கு இடையேயான இந்த மோதல் காரணமாக 2023 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ரவீந்திர ஜடேஜா விளையாடமாட்டார் என்று தகவல் வெளியானது.

இந்த நிலையில், 2023 சீசனிலும் சிஎஸ்கே அணிக்காக ஜடேஜா விளாயாடுவார் என்று சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளதை அடுத்து மோதல் தொடர்பான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.