டில்லி:

என்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக, அமலாக்கத் துறையில் சரணடைகிறேன் என்று ப.சிதம்பரம் சார்பில் செய்யப்பட்ட மனுவை டில்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், அமலாக்கத்துறையினர் கைது செய்வதில் இருந்து தப்பிக்கும் வகையில், சரணடைய விருப்பம் தெரிவித்து டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி,  அஜய்குமார் குஹார் முன்பு விசாரணைக்கு  வந்தது. அப்போது சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், ப.சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறை கடந்த ஆகஸ்டு  மாதம் 20-ம் தேதி அவரது வீட்டுக்கு வந்தனர்.  ஆனால், தற்போது, சிதம்பரத்தின் சிறைக்காவலை மேலும் நீட்டிக்க விரும்புகிறது.

இதன் காரணமாக சிதம்பரத்துக்கு மேலும் துன்பத்தை விளைவிக்க அமலாக்கத்துறை விரும்பு கிறது. இது தவறான நோக்கம் என்று கூறியவர்,  வழக்கு விசாரணையை அமலாக்கத்துறை விரைந்து முடிக்க வேண்டும் என வாதிட்டார்.

இதற்கு பதில் அளித்து வாதாடிய  அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா, ப.சிதம்பரத்தை தற்போது, அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க  விரும்பவில்லை. தேவைப்படும்போது அமலாக்கத்துறை காவலுக்கு விண்ணப்பிப்போம் என தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை ஒத்தி வைத்திருந்த நிலையில், இன்று, ப.சிதம்பரம் சரணடைய விருப்பம் தெரிவித்து தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.