டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கின் விசாரணைக்கு 7ந்தேதி நேரில் ஆஜராக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு  டெல்லி நீதிமன்றம்  சம்மன் அனுப்பி உள்ளது.

கடந்த 2007ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது,  மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது,  இந்திராணி-பீட்டர் முகர்ஜி தம்பதிக்கு சொந்தமான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம், 305 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடுகளை திரட்டியது. இதற்கு, சிதம்பரத்தின்  மகன் கார்த்தி சிதம்பரம் நடத்தி வந்த நிறுவனம், சட்ட விரோதமாக விதிமுறைகளை மீறி வெளிநாட்டு நிதி திரட்ட அனுமதி பெற்றதாகவும், இதில் முறைகேடு நடைபெற்று உள்ளதாகவும். இதற்கு பிரதிபலனாக மொரீஷியஸ் நாட்டில் இருந்து கார்த்தி சிதம்பரம் நிறுவனத் திற்கு பணம் வந்துள்ளதாகவும்  சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. இந்த வழக்கில் கடந்த 2019ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 21ஆம் தேதி, சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. அதைத்தொடர்ந்து, அக்டோபர் 16ஆம் தேதி, அவரை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்தது.  பின்னர் உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

இந்த வழக்கை டெல்லி நிதிமன்றம் விசாரித்து வருகிறது.   இந்த வழக்கில், அமலாக்கத்துறை தானாக முன்வந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் நேரில் ஆஜராக டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. ஏப்ரல் 7ஆம் தேதி, நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என சிறப்பு நீதிபதி எம்கே நாக்பால் உத்தரவிட்டுள்ளார்