சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூலை 4-ந்தேதி மீண்டும் முதலீட்டாளர்கள் சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பை பெருக்கும் வகையில், தொழில்வளத்தை உயர்த்தும் நோக்கில் திமுக அரசு முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி வருகிறது. ஏற்கனவே  கடந்த ஆண்டு ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் சென்னையிலும், நவம்பர் மாதம் கோவையிலும் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு,  மார்ச் மாதம் தூத்துக்குடியில் நடைபெற்றது. இதுமட்டுமின்றி, முதல்வர் ஸ்டாலின் துபாய், அபுதாபி போன்ற நாடுகளிலும் பல்வேறு முதலீட்டாளர்களை சந்தித்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது. இதுவரை 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், அடுத்த முதலீட்டாளர் மாநாடு, சென்னை நுங்கம்பாக்கத்தில் ஜூலை 4-ந்தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாநாட்டில் பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள உள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறக்கூடிய இந்த மாநாட்டில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம் உள்ளிட்ட அரசு சார்ந்த நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்த மாநாட்டில் எத்தனை நிறுவனங்களுடன் புரிந்துணவு ஒப்பந்தங்கள் மேற்கொள்வது, எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க கூடிய வகையில் ஒப்பந்தங்கள் போடப்படும் என்பது குறித்து அதிகாரிகள் விரிவாக ஆலோசித்து வருகின்றனர்.