திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே ஊராட்சி தலைவரை அவமதித்த ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகேயுள்ள கல்லரப்பாடி ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ஏழுமலை. இவருக்கும் ஊராட்சி செயலாளராக உள்ள வேல்முருகன் என்பவருக்கும் இடையே நிர்வாக ரீதியாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து, ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரிடம் புகார் தெரிவித்திருந்தார். அந்த புகாரில், ஊராட்சி செயலாளரான வேல்முருகன் தன்னை அவமரியாதையாக நடத்துவதாகவும், சாதி ரீதியாக பாகுபாடு காட்டுவதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.

இதனையடுத்து, இந்த புகார் குறித்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவின் பேரில் அதிகாரிகள் இருவருடமும் விசாரணை மேற்கொண்டு, ஆட்சியருக்கு அறிக்கை அளித்தனர். அதன் பேரில், ஊராட்சி மன்ற தலைவரை அவமரியாதையாக நடத்திய ஊராட்சி செயலாளர் வேல்முருகனை பணியிடை நீக்கம் செய்து, ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டார்.