டெல்லி: நாட்டின் 75வது சுதந்திர தினம் வரும் 15ந்தேதி நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட இருக்கும் நிலையில், பள்ளி, கல்லூரி களில் எப்போது தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்பது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுஉள்ளது.

இந்தியாவின் 75வது சுதந்திர தினவிழா வருகிற 15-ந்தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, அனைத்து அரசுத் துறை அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், கட்சி அலுவலகங்கள் உள்பட வீடுகள், தனியார் நிறுவனங்கள் என பல்வேறு இடங்களில் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடப்பட வேண்டும்  என மத்தியஅரசு அறிவித்து உள்ளது.  அந்த வகையில் பள்ளி, கல்லூரிகளில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வு குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு இருக்கின்றன.

இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு அனைத்து கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,  அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்களில் சுதந்திர தினவிழா அன்று தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி காலை 9 மணிக்கு பிறகு தொடங்கப்பட வேண்டும்.

கொரோனா சூழ்நிலையை பொறுத்து, நேரடியாகவோ அல்லது ஆன்லைன் வழியாகவோ (விர்ச்சுவல் பார்மெட்) தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வை ஏற்பாடு செய்யலாம்.

நேரடியாக நடக்கும் நிகழ்வில் அனைத்து பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பணியாளர்கள் பங்கேற்க வேண்டும்.

பெற்றோர், பாதுகாவலர்கள் கலந்து கொள்ள ஊக்குவிக்கப்பட வேண்டும்.

தேசிய போர் நினைவிடம் தொடர்பான வீடியோக்கள் மற்றும் அது தொடர்பாக தகவல்களை அன்றைய தினம் மக்களிடம் கொண்டு செல்வதற்கு பயன்படுத்தலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிகள், கல்லூரிகளுக்கு பொதுவாக வெளியிடப்பட்டவை ஆகும்.