துரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு வெளியே, மதுரை நகருக்குள் நான்கு திசைகளிலும் உள்ள கோவில்கள் “உள் ஆவரணம்” என அழைக்கப்படுகிறது. இதேபோல் மதுரை நகருக்கு வெளியேயும் நான்கு திசைகளிலும் நான்கு ஆலயங்கள் உள்ளன. இவை “வெளி ஆவரணங்கள்” என்று புகழப்படுகின்றன.

மதுரை நகருக்கு வெளியே தெற்கில் திருப்பரங்குன்றம், மேற்கில் திருவேடகம், வடக்கில் திருவாப்பனூர், கிழக்கில் திருப்புவனம் ஆகிய திருக்கோவில்களில் அமைந்துள்ளன. இவையே வெளி ஆவரணம் என்று கூறப்படுகிறது. இதே போல் மதுரை நகருக்குள், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு வடக்கு திசையில் குபேரன் வழிபட்ட பழைய சொக்கநாதர் கோவில், மேற்கு திசையில் சிவபெருமானே தன்னை அர்ச்சித்துக் கொண்ட இம்மையில் நன்மை தருவார் கோவில், கிழக்கு திசையில் வெள்ளை யானை வழிபட்ட ஐராவத நல்லூர் முக்தீஸ்வரர் கோவில், தெற்கில் எமன் வழிபட்ட தென்திருவாலவாய் கோவில் ஆகியவை உள்ளது. இவை அனைத்தும் உள் ஆவரணக் கோவில்களாகும்.

இம்மையிலும் நன்மை தருவார் இறைவன் தன்னைத்தானே தோற்றுவித்து வழிபட்ட பெருமை உடையதாக கருதப்படும் மத்தியபுரி அம்பாள் எனும் பெயரில் மீனாட்சி அம்மன் சமேத இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவில் மேலமாசி வீதியில் உள்ளது. இம்மையில் நன்மை தருவார் கோவில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் தென்மேற்கு திசையில் இருக்கிறது. பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் இத்தலம், அற்புதங்கள் நிறைந்த தலமாக திகழ்கிறது.

எந்தக் கோவிலுக்கு போனாலும் சிவலிங்கத்தின் முன் பகுதியையே நாம் தரிசிப்போம். ஆனால், இந்தக் கோவிலில் மட்டும் லிங்கத்தின் பின்புற தரிசனமும் நமக்கு கிடைக்கிறது. மதுரையை ஆண்ட மலையத்துவஜனின் மகளாக பிறந்த மீனாட்சியை, ஈசன் சுந்தரேஸ்வரராக வந்து மணந்து கொண்டார். பின் பாண்டிய மன்னராக பொறுப்பேற்க தயாரானார். அரசபீடத்தில் அமர்வதற்கு முன்தாக சிவபூஜை செய்ய வேண்டும் என்பது ஐதீகம். அதன் அடிப்படையில் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து பூஜை செய்தார். இதன் அடிப்படையில் இங்கு சிவனே, சிவலிங்கத்தை பூஜிக்கும் அமைப்பில் காட்சி தருகிறார்.

இங்கே சிவன் அம்பாளுடன் மேற்கு நோக்கி அமர்ந்து லிங்க பூஜை செய்கிறார். எனவே, லிங்கத்தின் முன்பகுதி அவர்களை நோக்கி இருக்கிறது. பக்தர்களுக்கு பின்புற தரிசனம் கிடைக்கிறது. தலைமை பதவி கிடைக்கவும், பணி உயர்வு பெறவும் சிவனுக்கு, “ராஜ உபச்சார அர்ச்சனை’ செய்து வேண்டி கொள்கிறார்கள். ஒருவர் செய்த பாவத்தை இந்தப் பிறவியிலேயே மன்னித்து நன்மை தருபவர் என்பதால் இவரை “இம்மையிலும் நன்மை தருவார்’ என அழைக்கப்படுகிறார்.

மீனாட்சியம்மன் கோவிலில் சிவனுக்கு பட்டாபிஷேகம் நடக்கும் முன்னதாக சிவன்- அம்பாள் இருவரும் இங்கு எழுந்தருள்வார்கள். இவ்விருவரையும் மூலஸ்தானத்தை நோக்கி வைத்து, இம்மையிலும் நன்மை தருவார், சுந்தரேஸ்வரர், மீனாட்சி மூவருக்கும் ஒரே சமயத்தில் தீபாராதனை, பூஜை நடக்கும். இந்த பூஜையை சிவனே செய்வதாக ஐதீகம் ஆகும்.

பத்து இலைகளுடன் கூடிய தசதள வில்வ மரம் இந்த ஆலயத்தின் தல விருட்சமாக உள்ளது. இங்குள்ள தட்சிணாமூர்த்தியை, குரு தோஷம் இருப்பவர்கள் வழிபாடு செய்கிறார்கள். ஆலயத்தில் அறுபது மற்றும் எண்பதாம் வயதில் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வுகள் அதிக அளவில் நடைபெறுகின்றன.

மதுரையில் திருவிளையாடல் நிகழ்த்திய சிவன் வல்லப சித்தராக வந்து கல்யானையை கரும்பு தின்னச் செய்தார். இவர் பத்மாசனத்தில் வலது கையில் ஆகாயம் காட்டி, இடக்கையில் சாம்பிராணி குங்கிலியம் வைத்து காட்சி தருகிறார். கல்வி, கலைகளில் வளர்ச்சி பெறவும், மன அமைதிக்காகவும் இவருக்கு பவுர்ணமி மற்றும் திங்கட்கிழமைகளில் சாம்பிராணி பதங்க (தைலத்திற்கு முந்தைய நிலை) காப்பிட்டு, பூப்பந்தல் வேய்ந்து வேண்டி கொள்கின்றனர். தை மற்றும் சித்திரை மாதத்தில் வரும் பவுா்ணமி மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் இவருக்கு விசேஷ பூஜை நடக்கிறது.

பொதுவாக சிவன் கோவில்களில், அவரது கணக்காளரான சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு எதுவும் நடப்பதில்லை. ஆனால், இத்தலத்திலுள்ள சண்டிகேஸ்வரருக்கு பக்தர்கள் விசேஷ பூஜை செய்கிறார்கள். தீராத பிரச்சினைகளில் இருந்து விடுபட சிவனுக்கு மாலை அணிவித்து பூஜை செய்து, அதே மாலையை இவருக்கு அணிவித்து வழிபடுகிறார்கள். இதனால், சண்டிகேஸ்வரர் தங்களது பிரச்சினை தீர சிவனிடம் பரிந்துரை செய்வார் என்று நம்புகிறார்கள். எனவே இவரை பக்தர்கள், ‘பரிந்துரைக்கும் சண்டிகேஸ்வரர்’ என்று அழைக்கிறார்கள். இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவில் மேலமாசி வீதியில் உள்ளது.