பெங்களூரு

பெங்களூருவில் இன்ஃபோசிஸில் பணி புரியும் மென்பொருள் எஞ்சினியர் கொரோனாவை பரப்பச் சொல்லிப் பதிவிட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உலகெங்கும் பரவி வரும் கொரோனா தொற்று இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது.  நேற்று வரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  இந்த வைரஸை விட இது குறித்து பொய் தவல்களும், ஆட்சேபகரமான பதிவுகளும் சமூக வலைத் தளங்களில் அதிக அளவில் பரவி வருகிறது.  இவற்றை காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

பெங்களூருவில் வசித்து வரும் முஜிப் முகமது என்னும் 25 வயது மென்பொருள் எஞ்சினியர் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில்  பணி புரிந்து வருகிறார்.  இவர் தனது முகநூல் பக்கத்தில் “கை கோர்ப்போம், வீடுகளை விட்டு வெளியே சொல்வோம். பொது இடங்களில் முகத்தை மூடாமல் தும்மி கொரோனா வைரசைப் பரப்புவோம்” எனப் பதிவிட்டிருந்தர்.  இது சர்ச்சையைக் கிளப்பியது.

இன்ஃபோசிஸ் நிறுவாமவரை உடனடியாக பணி நீக்கம் செய்துள்ளது.  அந்நிறுவனம் தனது டிவிட்டரில், “சமூக பகிர்வுக்கான உறுதிப்பாட்டுக்கும் நடத்தை நெறி முறைகளுக்கும் எதிராக எங்கள் ஊழியரின் முகநூல் பதிவு அமைந்துள்ளது.  எங்கள் நிறுவனம் இத்தகைய செயல்களைச் சகித்துக் கொள்ளாது.  அந்த ஊழியரை உடனடியாக பணி நீக்கம் செய்துள்ளோம்” என அறிவித்துள்ளது.

பெங்களூரு காவல்துறை இணை ஆணையர் சந்தீப் பாட்டில், “கொரோனா வைரசை பரப்ப வேண்டும் எனச் சர்ச்சைக்குரிய பதிவைப் பதிந்த முஜிப் முகமது கைது செய்யப்பட்டுள்ளார்.  இவர் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணிபுரிபவர் ஆவார்.  முஜிப் மீது வழக்குப் பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.