ஷ்யா

ஷ்யாவில் தற்போது நடந்த  சர்வதேச கணித ஒலிம்பியாட் 2021 போட்டிகளில் 5 இந்திய மாணவர்கள் பதக்கம் வென்றுள்ளனர்.

சர்வதேச கணித ஒலிம்பியாட் என்பது கல்லூரிப்படிப்புக்கு முந்தைய மாணவர்களுக்கான சர்வதேச அளவிலான கணித போட்டியாகும்.   இது சர்வதேச அறிவியல் ஒலிம்பியாட் போட்டிகளில் மிகவும் பழமையானது ஆகும்.   இதில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பங்கு  பெறலாம்

நடப்பாண்டு 2021 க்கான சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டி ரஷ்யாவில் நடைபெற்றது.  இதில் அனைத்து நாடுகளிலும் இருந்து ஆன்லைன் மூலம் மாணவர்கள் கலந்து கொண்டனர்.   இந்த போட்டிகளில்  இந்திய மாணவர்கள் 5 பதக்கங்களை வென்றுள்ளனர்.  இவை 1 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 3 வெண்கல பதக்கங்கள் ஆகும். 

சர்வதேச அளவில் இந்தியா 26 ஆம் இடத்தில் உள்ளது.   இந்த போட்டிகள் இந்தியாவில் இரு அடுக்குகளாக நடந்தன.   முதல் அடுக்கில் நாடெங்கும் நடந்த தேர்வில் 17,352 மாணவர்கள் கலந்து கொண்டனர்.  இந்த தேர்வு நாடெங்கும் 175 மையங்களில் இந்தியக் கணித ஆசிரியர்களால் நடத்தப்பட்டன. 

இதில் தேர்வு பெற்ற 126 மாணவர்களைக் கொண்டு 25 மையங்களில் இரண்டாம் கட்ட தேர்வு  நடந்து அதில் வெற்றி பெற்றவர்கள் ஒலிம்பியாடில் கலந்து கொண்டனர்.  வழக்கமாக 4 அடுக்குகளாக நடைபெறும் இந்த தேர்வுகள் தற்போதைய கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இரண்டு கட்டமாக நடந்துள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த பிரஞ்சால் ஸ்ரீவத்சா என்னும் மாணவர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.  இவர் ஏற்கனவே 2019 ஆம் வருடம் தங்கப்பதக்கமும் 2018 ஆம் வருடம் வெள்ளி  பதக்கங்களையும் வென்றவர் ஆவார்.  இரண்டு தங்கப்பதக்கங்களை வென்ற ஒரே இந்திய மாணவர் என்னும் பெருமையும் இவர் பெற்றுள்ளார்.

புனேவை சேர்ந்த அனிஷ் குல்கர்னி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.  மேலும் புனேவை சேர்ந்த அனன்யா ரானடே, டில்லியை சேர்ந்த ரோகன் கோயல், காசியாபாத்தைச் சேர்ந்த சுசிர் கவுஸ்தவ் ஆகியோர் வெண்கல பதக்கங்களை வென்றுள்ளனர்.