டெல்லி: கனடா – இந்தியா உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில், தற்போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து  இந்தியா. மீண்டும் கனடாவுக்கான விசா சேவையை தொடங்கி உள்ளது.

காலிஸ்தான பயங்கரவாத அமைப்பின் தலைவர் கனடாவில் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியா – கனடா இடையேயான உறவில் கடந்த சில நாட்களாக மோதல் போக்கு நிலவி வந்தது.  கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு பின்னணியில் இந்தியா இருப்பதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார் . ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுக்களை இந்தியா மறுத்ததோடு கண்டனமும் தெரிவித்தது.

இதுதொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிய நிலையில், இரு நாடுகளின் தூதரகங்களும் மூடப்பட்டு தூதர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். கனடாவில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரித்தது.  தொடர்ந்து இரு நாட்டுக்கு இடையே எழுந்த  மோதல் காரணமாக கடந்த மாதம் (செப்டம்பர், 2023)  21ம் தேதி முதல் கனடாவுக்கான விசா சேவையை நிறுத்தி அதிரடி காட்டியது இந்தியா. பாதுகாப்பு காரணங்களால் விசா சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக கனடாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்தது.

இதனால் கனடாவில் இருந்து இந்தியா வரமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால்,  மீண்டும் விசா வழங்கும் சேவையை தொடங்க வேண்டும் என்று கனடா அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து இன்று முதல் மருத்துவ விசா, பிஸ்னஸ் விசா, என்ட்ரி விசா, கான்பரன்ஸ் விசா ஆகிய 4 விசா சேவைகள் தொடங்கியது. இதனால் இந்தியா வர காத்திருந்த பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.