டெல்லி: கொரேனா தொற்று பரவலில் இருந்து சிறுவர்களை பாதுகாத்துக்கொள்ள வரும் மார்ச் மாதம் முதல் 12 முதல் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடத்திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

உலக நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தி உள்ள கொரோனா தொற்று பரவலில் இருந்து, பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பித்து வருகின்றனர்.  இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி 16-ந்தேதி கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கியது. முதலில் சுகாதார பணியாளர்கள் உள்பட முன்களப் பணியாளர்களுக்கு  தடுப்பூசி போடப்பட்டது. தொடர்ந்து  60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், இணைநோய்களை உடைய 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கடந்த மார்ச் 1-ந்தேதி தடுப்பூசி போடுவது தொடங்கியது. ஏப்ரல் 1-ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது தொடங்கியது. மே 1 முதல் 18 வயதான அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.

அதனைத்தொடர்ந்து 2022ம் ஆண்டு ஜனவரி  3-ந்தேதி முதல் 15-18 வயது பிரிவினருக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. ஜனவரி 10ந்தேதி முதல் முன்களப்பணியாளர்களுக்கும், மூத்த குடிமக்களுக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.  தற்போதைய நிலையில் நாடு முழுவதும் 157 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இவர்களில் 65.6 கோடி பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றுள்ளனர். மொத்த மக்கள் தொகையில்  47.5 சதவிகிதம் பேர் மட்டுமே தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், தடுப்பூசி போடும் திட்டத்தின்   அடுத்தக்கட்ட நடவடிக்கையாக 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.  இதுகுறித்து  மத்திய அரசு சார்பில் தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு தலைவர் டாக்டர் என்.கே.அரோரா கூறியிருப்பதாவது,

தற்போது நாடு முழுவதும் 15-18 வயது பிரிவினருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இந்த பிரிவினரில் 7 கோடியே 40 லட்சத்து 57 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில் 3 கோடியே 45 லட்சம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு விட்டது.  தடுப்பூசி இன்னும் செலுத்திக்கொள்ளாத இந்த வயது பிரிவினர் இந்த மாத இறுதிக்குள் தடுப்பூசி செலுத்தப்பட்டு விடுவார்கள். இந்த வயது பிரிவினருக்கு 2-வது டோஸ் பிப்ரவரி மாத இறுதிக்குள் போடப்பட்டு விடும்.  அதைத்தொடர்ந்து, 12 முதல் 14 வயது பிரிவினருக்கு மார்ச்சில் தடுப்பூசி போடுவதற்கான கொள்கை முடிவை அரசு எடுத்து அறிவிக்கும் என்றும் தெரிவித்தார்.

12-14 வயது பிரிவினர் 7.5 கோடி பேர் தடுப்பூசி போடுவதற்காக தயாராக இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.