சென்னை

சென்னையில் 75 ஆம் சுதந்திர தினத்தையொட்டி 17 லட்சம் வீடுகள் மற்றும் முக்கிய சாலைகளில் தேசிய கொடி எற்ற மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசு நாட்டின் 75 ஆம் சுதந்திர தினத்தையொட்டி, அனைத்து வீடுகளிலும் ஆகஸ்ட் 13, 14, 15-ம் தேதிகளில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று அறிவித்துள்ளது.  இதையொட்டி அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்தில் பல்வேறு துறைகளின் செயலர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

அப்ப்போது தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 13, 14, 15-ம் தேதிகளில் அனைத்து வீடுகள், அரசு அலுவலகங்கள், பேருந்துகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள் என அனைத்து இடங்களிலும் தேசியக் கொடி ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

இன்று சென்னை மாநகராட்சியில் இது தொடர்பாக ஆய்வுக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.  இதில் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் ககன்தீப்சிங்பேடி, நிலைக் குழுத் தலைவர்கள், மண்டல தலைவர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ,

  • சென்னையில் உள்ள 17 லட்சம் குடியிருப்புகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும்.
  • அனைத்து வணிக நிறுவனங்களிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும்
  • அனைத்து கடைகளிலும் தேசியக் கொடி விற்பனை செய்ய வேண்டும்.
  • சுய உதவிக் குழுக்கள் மூலம் தேசியக் கொடி தயாரிக்கலாம்.
  • முக்கிய சாலைகளில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும்.

எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.