சென்னை: கிருஷ்ணா நீர், புழல் ஏரி, சோழவரம் உள்பட சென்னைகு குடிநீர் வழங்கும்  ஏரிகளில் நீர் இருப்பு அதிகரித்துள்ளதால், சென்னையின் குடிநீர் தேவையை 8 மாதம் சமாளிக்கலாம் என அதிகாரிகள்  தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை நேரத்தின் போதும், வடகிழக்கு பருவமழை தொடக்கத்தின் போதும் நல்ல மழை பெய்ததால்  புழல் ஏரிக்கு நீர்வரத்து 93 கனஅடியாக உள்ளது. சோழவரம் ஏரிக்கு 56 கனஅடியாக இருந்த நீர்வரத்து  46 கனஅடியாக சரிந்துள்ளது. கண்ணன் கோட்டை ஏரிக்கு நீர்வரத்து 3 கனஅடியாக உள்ளது. அதுபோல, தமிழகத்திற்கு வரும் கிருஷ்ணா நதி நீர்வரத்து 557 கனஅடியிலிருந்து 571 கனஅடியாக அதிகரித்துள்ளது. கண்டலேறு அணையில் இருந்து சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 2100 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும்,  சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் அதிக அளவு தண்ணீர் இருப்பு உள்ளது.

இதுகுறித்து கூறிய குடிநீர் வழங்கல்துறை அதிகாரிகள்,  சமீபத்தில் பெய்த மழை மற்றும் கிருஷ்ணா நீர்வரத்து காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு இன்னும் சில நாட்களில் 10 டி.எம்.சி.யை எட்டிவிடும் என்று கூறியதுடன், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13.222 டி.எம்.சி. ஆகும். இதில் தற்போதைய நிலவரப்படி 9.459 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது.

தமிழகத்துக்கு தற்போது வினாடிக்கு 557 கன அடி கிருஷ்ணா நீர் வந்து கொண்டிருக்கிறது. அதை வினாடிக்கு 1000 கனஅடியாக அதிகரிக்க கோரி ஆந்திர அரசிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு இதுவரை ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு 1.5 டி.எம்.சி. தண்ணீர் வந்துள்ளது. வருகிற பிப்ரவரி மாதம் கண்டலேறு அணையை புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே ஜனவரிக்குள் மீதமுள்ள 6.5 டி.எம்.சி.யை பெறுமாறு நீர்வளத்துறையிடம் ஆந்திரா அரசு அறிவுறுத்தி உள்ளது என்று தெரிவித்தனர். மேலும், இன்றைய நிலவரப்படி சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் இன்னும் 8 மாதங்களுக்கு போதுமான தண்ணீர் இருப்பு உள்ளது”, என்று தெரிவித்து உள்ளனர்.