சென்னை: பாம்பன் பாலம் திறப்பு – ராக்கெட் ஏவுதளம் அடிக்கல் நாட்டவும்  பிரதமர் மோடி டிசம்பர் மாதம் தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாம்பன் ரயில்பாலம் கட்டப்பட்டு நூற்றாண்டை கடந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி புதிய பாலம் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டி இருந்தார். இந்த பாலத்தை அடுத்த மாதம் மக்கள் பயன்பாட்டுக்காக அர்பணிக்க உள்ளார்.

மேலும் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமைய உள்ள ராக்கெட் ஏவுளத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்ட திட்டமிட்டுள்ள தாகவும், இதில் கலந்துகொள்ள  ஒருநாள் பயணமாக  பிரதமர் நரேந்திர மோடி வரும் டிசம்பர் முதல் வாரத்தில் தமிழ்நாட்டுக்கு  பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அத்துடன்,  2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்  மற்றும் தமிழ்நாடு   பாஜகவின் செயல்பாடுகள் குறித்தும் கூட்டணிகள் குறித்தும் தமிழக பாஜக நிர்வாகிகளை சந்தித்து பேசுவார் என எதிர்பாக்கப்படுகிறது.  அதனால், பிரதமரின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மேலும்,  பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கி உள்ள என் மண் என் மக்கள் நடைபயணம் வரும் ஜனவரி மாதம் நிறைவடைய உள்ள நிலையில், இந்த நடைபயணத்தின் நிறைவு நிகழ்ச்சியிலும் பிரதமர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருவது உறுதியாகி உள்ளது.