டில்லி

டந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களில் அரசு மற்றும் தனியார் வங்கிகளின் ரூ80893 கோடி வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக நிதித்துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசுத் துறை மற்றும் தனியார் துறை வங்கிகளின் முக்கிய பிரச்சினைகளில் வாராக்கடனும் ஒன்றாகும்.   இந்த வாராக்கடன்கள் வங்கியின் கணக்குகளில் காட்டப்படுவதில்லை என்றாலும் அது வங்கிக்கு வர வேண்டியதாகவே கொள்ளப்படுகிறது.   இந்த வாராக்கடன்களில் முடங்கி உள்ள நிதியினால் பல வங்கிகள் வழக்கமான தேவைகளுக்கான நிதி இன்றி உள்ளன.

இந்த வாராக்கடன்களுக்கு ஈடாகச் சொத்துக்கள் உள்ளதாக வங்கிகள் தெரிவித்த போதிலும் பல நேரங்களில் சொத்துக்களின் மதிப்பு வாராக்கடன்களின் மதிப்பை விடக் குறைவாகவே இருக்கின்றன.   எனவே அவ்வாறான வேளைகளில் அந்தக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டிய நிலையில் உள்ளன.  பாரத ஸ்டேட் வங்கியில் மட்டும் சென்ற வருடம் ரூ.76000 கோடி வரை தள்ளுபடி செய்யப்பட்டதாக தகவல்கள் கிடைத்தன.

தற்போது நடைபெறும் குளிர்காலக் கூட்டத்தொடரில் இந்த வருடம் வங்கிகள் தள்ளுபடி செய்த கடன் தொகை குறித்து மாநிலங்களவையில் கேள்வி கேட்கப்பட்டது.  இதற்கு பதில் அளித்த நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்குர் இந்த வருடம் ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரையிலான ஆறு மாத கால கட்டத்தில் அரசு மற்றும் தனியார் வங்கிகள் ரூ.80893 கோடி மதிப்பிலான வாராக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளதாகத் தெரிவித்தார்.