சென்னை: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 332 ஆய்வக நுட்புனர்களுக்கு பணி ஆணைகளை வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த  20 நாட்களில் சுமார்  2200 மருத்துவ பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். அதாவது, கடந்த 06.02.2024 அன்று 1021 மருத்துவர்களுக்கும், 11.02.2024 அன்று 977 தற்காலிக செவிலியர்களுக்கும், இன்று 332 ஆய்வக நுட்புனர்கள் என ஏறத்தாழ 2,200க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர் பணியிடங்கள் கடந்த 20 நாட்களிலேயே நிரப்பப்பட்டுள்ளன.

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,  மருத்துவப்பணியாளர் தேர்வாணையம் மூலம் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 332 ஆய்வக நுட்புனர்களுக்கு ணிநியமன ஆணையினை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,  கடந்த 6.02.2024 அன்று மருத்துவ பணியாளர் தேர்வாணையம் (MRB) மூலம் 1,021 மருத்துவ பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது. அந்த 1021 மருத்துவர்களும் 15 நாட்கள் கால அவகாசத்துக்குள் பணியில் சேரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அந்த வகையில் 90 சதவிகித்திற்கு மேலான மருத்துவர்கள் தற்போது தமது பணியிடங்களுக்குச் சென்று பணியினை மேற்கொண்டிருக்கிறார்கள்.

அதே போல் கடந்த 11.02.2024 அன்று 977 செவிலியர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. அவர்களுக்கும் 15 நாட்கள் கால அவகாசம் தரப்பட்டது. இதுவரை ஏறத்தாழ 50 சதவிகித செவிலியர்கள் பணியில் சேர்ந்து பணியாற்ற தொடங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த துறையில் காலியாக இருக்கிற ஆய்வக நுட்புனர்கள் பணியிடங்கள் 332 நிரப்புவதற்குறிய நடவடிக்கைகளை முதலமைச்சரின் அறிவுறுத்தலோடு மருத்துவப்பணியாளர் தேர்வாணையம் அதற்கான அனைத்து பணிகளையும் முடித்து நேற்றைக்கு முன்தினம் அந்த பட்டியல் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநரிடம் தரப்பட்டது.

இந்த துறையில் கடந்த 3 நிகழ்வுகளாக 6.02.2024, 11.02.2024 மற்றும் இன்று ஆகிய நாட்களில் நடைபெற்ற பணி நியமன உத்தரவுகள், இந்தியாவிலேயே முதல்முறையாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு கலந்தாய்வு என்கின்ற வகையில் கலந்தாய்வு நடத்தப்பட்டு அவரவர்கள் விரும்புகிற இடங்களுக்கு பணிநியன ஆணைகள் வழங்கப்பட்டது. அதேபோல் நேற்று ஒரே நாளில் இந்த 332 ஆய்வக நுட்புனர் பணியிடங்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு, அவரவர்கள் விரும்புகிற இடங்களுக்கு அவர்கள் தேர்வு செய்து பணிநியமன ஆணைகள் பெற்றிருக்கிறார்கள். தற்போது 332 ஆய்வக நுட்புனர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கியிருக்கிறோம்.

பணி ஆணைகளை பெறும்போது அவரவர் சொந்த பகுதிகளிலேயே பணி ஆணை கிடைத்திருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்கள். அங்கேயே நாங்கள் பணியாற்றுவதற்கு வாய்ப்புகள் தந்த அரசிற்கு நன்றியினை தெரிவித்தார்கள்.

இன்னமும் இந்த துறையைப் பொறுத்தவரை பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்ற சூழ்நிலையில் 2,250 கிராம சுகாதார செவிலியர்கள், 986 மருந்தாளுநர்கள், 1066 சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் 798 ஆக மொத்தம் 5100 பேரை தேர்வு செய்வதற்குரிய பணிகளை மருத்துவப்பணியாளர் தேர்வாணையம் (MRB) செய்துக் கொண்டிருக்கிறது. அப்பணிகளும் இறுதி நிலைக்கு வந்துள்ளது. அந்த வழக்குகளையெல்லாம் நமது துறையின் செயலாளர் நல்ல தீர்வு காண்பதற்குரிய நடவடிக்கைகளை சட்டபூர்வமாக மேற்கொண்டு வருகிறார்கள்.

முதலமைச்சரின் அறிவுறுத்தலோடு, 5100 பணியிடங்களும் எதிர்வரும் ஒரு மாத காலத்திற்குள் நிரப்புவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

அதாவது, கடந்த 06.02.2024 அன்று 1021 மருத்துவர்களுக்கும், 11.02.2024 அன்று 977 தற்காலிக செவிலியர்களுக்கும், இன்று 332 ஆய்வக நுட்புனர்கள் என ஏறத்தாழ 2,200க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர் பணியிடங்கள் கடந்த 20 நாட்களிலேயே நிரப்பப்பட்டுள்ளன என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.