சென்னை: பிரபல பத்திரிகையாளரும், யுடியூபருமான சவுக்கு சங்கர் பெண் போலீசார் மற்றும் போலீசார் குறித்து அவதூறாக பேசிய வழக்கு மற்றும் கஞ்சா வழக்கில்  கைது செய்யப்பட்டு,  சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் தேனி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

. பெண் பத்திரிகையாளரை அவதூறாக பேசியது, கஞ்சா வைத்திருந்த வழக்குகளில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். கஞ்சா வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு அடிப்படையில் தேனி காவல்துறை சோதனை நடத்தி வருகிறது. மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீடு, தியாகராய நகரில் உள்ள அலுவலகத்தில் தேனி போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

முன்னதாக, காவல் உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் மத்திய சிறையில் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை போலீசார் கடுமையாக சித்ரவதை செய்து கை எலும்பை உடைத்து விட்டதாகவும், அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதனை ஏற்று நீதிமன்றம் கொடுத்த அனுமதியின் பேரில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே, மே 22ம் தேதி வரை சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சவுக்கு சங்கருக்கு எதிராக திருச்சி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், இசவுக்கு சங்கர் மீது மேலும் 2 வழக்குகள் பதியப்பட்டுள்ளதால் அந்த வழக்குகளிலும் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் மற்றும் வீரலட்சுமி ஆகியோர் அளித்த புகாரில் ஏற்கனவே வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த இரு வழக்குகளிலும் யூ டியூபர் சவுக்கு சங்கரை சென்னை போலீசார் கோவை மத்திய சிறைக்கு சென்று கைது செய்தனர். இரு வழக்கிலும் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவினை போலீசார் சவுக்கு சங்கரிடம் வழங்கினா். இந்த நிலையில் கஞ்சா வழக்கு தொடர்பான இன்று சோதனை நடத்தப்பட்டு வருகிறது.