சென்னை: தமிழ்நாட்டின் அனைத்து வகையான அரசு பேருந்துகளிலும்  5வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச பயணம் திட்டம் வழங்கும் திட்டம் உடனே அமலுக்கு வருவதாக தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

கடந்த மே 5ஆம் தேதி, தமிழக சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறையின் மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பிறகு பேசிய போக்கு வரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், ”5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைத்துவகை அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்” என்று அறிவித்தார்.  தற்போது, 3 – 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரை கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. அவை நீக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் அனைத்து வகை பேருந்துகளிலும் 5 வயதுக்குட்பட குழந்தைகளுக்கு இலவச பயணம் செய்ய அனுமதி வழங்கியும்,அதனை  உடனடியாக அமல்படுத்தவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 5வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இருக்கை தேவைப்படின் அரை டிக்கெட் வாங்க வேண்டும். இல்லையேல்  தாயின் மடியில் அமர வைத்து இலவசமாக பயணம் செய்யலாம்.