டில்லி:

த்தியஅரசு கொண்டு வந்துள்ள தேசிய மருத்துவக் கவுன்சில் மசோதாவை எதிர்த்து, அகில இந்திய மருத்துவர்கள் சங்கம் நாடு முழுவதும் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகிறது.

1956ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருக்கும் இந்திய மருத்துவ கவுன்சிலை ரத்து செய்து அதற்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கான சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தாக்கல் செய்தார்.  அது மக்களவை மற்றும் மாநிலங்களவையில்  நிறைவேற்றப்பட்டு உள்ளது.

இந்த மசோதாவில் உள்ள ஷரத்துக்கள், தனியாருக்கு சாதகமாக இருப்பதாகக் கூறி எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் கடந்த ஜூலை மாதம் 31ந்தேதி  மருத்துவர்கள்  ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். அதன்படி காலை 6 மணி முதல் நாளை மறுநாள் காலை 6 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் டில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் உள்பட அனைத்து மாநில மருத்துவர்களும் கலந்து கொண்டனர்.  மேலும், மருத்துவக் கல்லூரி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இந்த நிலையில், மருத்துவகக் கவுன்சில் மசோதாக்கு எதிராக போராட்டத்தை இந்திய மருத்துவர்கள் சங்கம் தீவிரப்படுத்தி வருகிறது. இதுகுறித்து கூறிய ஐ.எம்.ஏ மாநில செயலாளர் என்.சுல்பி, மாநிலங்களவை நிறைவேற்றிய என்.எம்.சி மசோதா சில திருத்தங்களை உள்ளடக்கியிருந்தாலும், மசோதாவின் முக்கிய விதிகள் நாட்டின் சுகாதார மற்றும் மருத்துவ கல்வித் துறைக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் உள்ளது. இதன் காரணமாகவே மசோதாவை எதிர்க்கிறோம் என்றார்.

மேலும், இது தொடர்பாக இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் அவசரக் கூட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை கூடுகிறது. இதில் ஒரு செயல்திட்டம் உருவாக்கப்படும் என்றார். மேலும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மருத்துவ மாணவர்கள் தொடங்கியுள்ள போராட்டம், நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும், அங்கு மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும் சுல்பி தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே டில்லி உள்பட சில மாநிலங்களில் மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று டில்லியில் நடைபெற்ற மருத்துவ மாணவர்கள் போராட்டத்தின்போது, தேசிய மருத்துவ ஆணையத்தின் மசோதாவின் நகலை தீயிட்டு கொளுத்தி தங்களது எதிர்பப்பை பதிவு செய்தனர்.