டெல்லி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘மால்னுபிராவிர்’ மாத்திரை கொடுக்க வேண்டாம் என  ஐ.சி.எம்.ஆர். அறிவுறுத்தி உள்ளது.  மால்னுபிராவிர் மாத்திரையை உலக சுகாதார அமைப்பும், இங்கிலாந்தும் கொரோனா சிகிச்சையில் சேர்த்துக் கொள்ளாத நிலையில், அதை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று தெரிவித்து உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று மற்றும் ஒமிக்ரான் பரவல் வேகமெடுத்துள்ளது. இதை தடுக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணிகளும் ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகிறது. இருந்தாலும் பல ஏழை நாடுகளுக்கு இன்னும் தடுப்பூசிகள் கிடைக்காத நிலையும் உள்ளது. இந்தியாவிலும் தொற்று பரவல் வேகமெடுத்துள்ளதால், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி, குழந்தைகளுக்கான தடுப்பூசி உள்பட தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கடந்த மாதம் இந்திய மருந்துகள் தர கட்டுப்பாடு இயக்குனரகம் வெளியிட்ட அறிவிப்பில்,  கொரோனா பாதிப்பின் தீவிரம் குறைவாக உள்ளவர்கள் மால்னுபிராவிர் மாத்திரையை டாக்டர்கள் பரிந்துரையின்படி எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த அறிவிப்புக்கு ஐசிஎம்ஆர் தடை போட்டுள்ளது.

மால்னுபிராவிர் மாத்திரை பாதுகாப்பு சார்ந்த குறைபாடுகளை கொண்டு இருப்பதால், அதை தவிர்க்க வேண்டும் என்றும், உலக சுகாதார அமைப்பும், இங்கிலாந்தும் இந்த மாத்திரையை கொரோனா சிகிச்சையில் சேர்த்துக் கொள்ளவில்லை என்றும், மால்னுபிராவிர் மாத்திரைகள் தேசிய சிகிச்சைக்கான விதிமுறையில் இணைக்க இக்குழு ஆதரவு தெரிவிக்கவில்லை   இந்திய ஆராய்ச்சி மருத்துவ கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) இயக்குனர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.

மால்னுபிராவிர் மாத்திரை தயாரிப்பு நிறுவனமோ, இந்த மாத்திரை முற்றிலும் பாதுகாப்பானது என்று தெரிவித்துள்ளதுடன், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மாத்திரையை எடுத்துக்கொண்டால்  உயிரிழப்பும் பெருமளவில் குறைவது 3-ம் கட்ட பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளது.