போபால்

முஸ்லிம்கள் கொலை செய்யப்படுவது குறித்து காஷ்மீர் ஃபைல்ஸ் போல  படம் எடுக்க வேண்டும் மத்தியப் பிரதேச ஐ ஏ எஸ் அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.

கடந்த மார்ச் 11ஆம் தேதி வெளியான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் காஷ்மீரில் 1990-களில் இந்து பண்டிட்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதையும், தீவிரவாதிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பண்டிட்கள் அங்கிருந்து வெளியேறிய சம்பவங்களையும் சித்தரிக்கிறது.

இந்த படத்தை விவேக் அக்னிஹோத்ரி எழுதி இயக்கி ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்க அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, பல்லவி ஜோஷி, தர்ஷன் குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். பிரதமர் மோடி இந்த படத்தைப் பாராட்டியதோடு பாஜக எம்.பி.க்கள் அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். இவ்வாறு பிரதமர் பேசியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மத்திய.பிரதேச.பொதுப்பணித்துறையின் துணைச்செயலாளர் நியாஸ்கான் ஐஏஎஸ் தனது டிவிட்டர் பதிவுகளில்,

”பிராமணர்களின் வலியை தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ காட்டுகிறது. மீண்டும் அவர்கள் காஷ்மீரில் அனைத்து மரியாதையுடன் பாதுகாப்பாக வாழ அனுமதிக்கப்பட வேண்டும். அதைப் போல பல மாநிலங்களில் ஏராளமான  முஸ்லிம்கள் கொல்லப்பட்டதைக் காட்ட தயாரிப்பாளர்  ஒரு திரைப்படத்தையும் உருவாக்க வேண்டும். இந்தியாவில் முஸ்லிம்கள் பூச்சிகள் அல்ல, அவர்களும் மனிதர்கள்.  நாட்டின் குடிமக்கள் ஆவர்.

முஸ்லிம்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் படுகொலை செய்யப்படுவதைக் காட்ட ஒரு புத்தகம் எழுத நினைத்துக்கொண்டிருக்கிறேன். அதை அடிப்படையாகக் கொண்டு காஷ்மீர் ஃபைல்ஸ் போன்ற திரைப்படத்தைப்போல சில தயாரிப்பாளர்கள் தயாரிக்க முன்வர வேண்டும். அதனால் சிறுபான்மையினரின் வலி மற்றும் துன்பங்களை இந்தியர்கள் முன் கொண்டு வர முடியும்”

என்று தெரிவித்துள்ளார்.