ஜெய்ப்பூர்

ற்கனவே பஞ்சாப் மாநிலத்தில் வெற்றி அடைந்துள்ள ஆம் ஆத்மி கட்சி அடுத்ததாக ராஜஸ்தான் மாநிலத்தில் களம் இறங்கத் திட்டமிட்டுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 117 இடங்களில் 92 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது . பகவந்த் மான் பஞ்சாபின் முதல் அமைச்சராக  பொறுப்பு ஏற்றுள்ளார் . ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் கிடைத்த அமோக வெற்றியால் உற்சாகமடைந்துள்ள ராஜஸ்தானில் களமிறங்கத் திட்டமிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. எனவே ராஜஸ்தானில் ஆம் ஆத்மி கட்சியை பலப்படுத்த ஜெய்ப்பூரில் இரண்டு நாள் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  இதையொட்டி மாநிலக்கள்வை உறுப்பினர் சஞ்சய் சிங், மார்ச் 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் நிகழ்ச்சியில் கட்சியின் நலக் கொள்கைகள் குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிக்க உள்ளார்.

மேலும் துவாரகாவைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் சட்டசபை உறுப்பினரும், முன்னாள் எம்.பியுமான மகாபல் மிஸ்ராவின் மகன் வினய் மிஸ்ராவுக்கு இந்த மாநாட்டின்போது பொறுப்பு வழங்கப்படலாம் என்று கட்சி சார்பில் கூறப்பட்டுள்ளது.   டில்லி மற்றும் பஞ்சாபுக்கு அருகில் ராஜஸ்தான் இருப்பதால் அங்கு கட்சியை வலுப்படுத்த, இந்த இரண்டு நாள் மாநாட்டை நடத்துகிறது.

ஆம் அத்மி கட்சியின் ராஜஸ்தான் மாநிலத் தலைவரின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்று ஆம் ஆத்மி கட்சியின் மாநில இணை பொறுப்பாளர் கேம்சந்த்  ஜாகிர்தார் கூறியுள்ளார்.  ஏற்கனவே 2018-ம் ஆண்டு நடந்த ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி 200 தொகுதிகளில் 142 வேட்பாளர்களை நிறுத்தி ஒரு தொகுதியில் கூட ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.