தெஹ்ரான்: “உரிமைகளுக்காக எந்த விலையும் கொடுப்பேன்” என  ஈரானில் ஹிஜாபுக்கு எதிரான போராடும் பெண்களுக்கு  பிரபல நடிகை ஆதரவு தெரிவித்து உள்ளர்.

ஈரானின் பிரபல நடிகையான தாரனே அலிதூஸ்டி ஹிஜாப் அணியாமல் தனது புகைப்படத்தைப் பதிவிட்டு போராட்டாக்காரர்களுக்கு தனது ஆதரவை வழங்கி யிருக்கிறார். “உரிமைகளுக்காக எந்த விலையும் கொடுப்பேன்” என தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே ஆப்கானிஸ்தானில்தான்  தாலிபான்கள்தான் இதுபோன்ற பழமைவாத கட்டுப்பாடுகளை பெண்களுக்கு விதித்து வரும் நிலையில், ஈரானும் அதுபோன்ற கட்டுப்பாடுகளை பெண்களுக்கு விதித்திருப்பது அந்நாட்டு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஈரானில் சிறுமிகள் முதல் அனைத்து பெண்களும் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க ‘காஸ்த் எர்ஷாத்’ என்ற சிறப்புப் பிரிவு போலீஸ் படை அமைக்கப்பட்டு, பெண்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த காவல்துறையினர் 24மணி நேரமும் ரோந்து சுற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 13-ம் தேதி ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரைச் சேர்ந்த மாஷா அமினி என்ற 22வயருது இளம்பெண், ஈரான் தலைநகர்  தெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார். அப்போது சிறப்புப் படை போலீஸார், மாஷாவை வழிமறித்து அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம் சாட்டி  அவரை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். போலீஸ் காவலில் அவர் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டதால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இந்த இளம்பெண் கோமா நிலைக்குச் சென்றார். இதையடுத்து கடந்த செப்டம்பர் 16-ம் தேதி மாஷா அமினி உயிரிழந்தார் இதற்கு உலக நாடுகளும் அதிர்ச்சி தெரிவித்தன. சமூக ஆர்வலர்களும் ஈரானை கடுமையாக விமர்சித்தனர்.

மாஷாவின் மரணத்தைத் தொடர்ந்து ஈரானில் பெண்கள் ஹிஜாப்புக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். போராட்டத்தை ஈரான் காவல்துறையினர் ஒடுக்கி வருகின்றனர். இருந்தாலும் ஆங்காங்கே போராட்டம் பரவி வருகிறது.

இந்த பரபரப்பா சூழலில், ஈரானின் பிரபல நடிகை தாரனே அலிதூஸ்டி, ஹிஜாப்புக்கு எதிரான பெண்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். ஹிஜாப் அணியாதன தனது புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு போராட்டாக்காரர்களுக்கு ஆதரவை வழங்கி இருக்கிறார். அத்துடன்,  ‘நான் இங்குதான் இருக்கிறேன். இங்கிருந்து வெளியே செல்லமாட்டேன். நான் எனது பணியை நிறுத்திவிட்டு இப்போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும், கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்திற்கும் ஆதரவாக இருக்கப் போகிறேன். நான் அவர்களுக்காக வாதாட போகிறேன்.நான் எனது தாய் நாட்டுக்காகப் போராடுவேன். எனது உரிமைகளுக்காக நிற்க நான் எந்த விலையையும் கொடுப்பேன். முக்கியமாக, இன்று நாம் அனைவரும் ஒன்றுகூட வேண்டும் என்று நம்புகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

நடிகையின் ஆதரவு அந்நாட்டில் போராடி வரும் பெண்களுக்கு மேலும் ஊக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. நடிகை தாரனே அலிதூஸ்டி ஆஸ்கர் விருது வென்ற ‘தி சேல்ஸ் மேன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.