சென்னை:

ஜினிகாந்தின் அரசியல் வருகையால் தமிழக்ததில் மாற்றங்கள் ஏற்படும் என்றும், அவரை விரைவில் சந்திப்பேன் என்றும் மு.க.அழகிரி கூறி உள்ளார்.

கடந்த 5 நாட்களாக தனது ரசிகர்களை சந்தித்து வந்த ரஜினி, இன்று அரசியல் குறித்து அறிவிப்பதாக கூறியிருந்தார். அதன்படி இன்று தனது அறிவிப்பை வெளியிட்டார்.

அப்போது, அரசியலுக்கு தான்  வருவது உறுதி என்ற ரஜினி,  வரும் சட்டசபை தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிட போவதாக  தெரிவித்துள்ளார்.

அவரது அரசியல் வருகை குறித்த அறிவிப்புக்கு பல்வேறு தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரஜினியின் அரசியல் வருகை குறித்து திமுகவை சேர்ந்த முன்னாள் தென்மண்டல செயலாளர்  முக அழகிரி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

ரஜினியின் அரசியல் வருகையால் மாற்றங்கள் ஏற்படும் என்றும், ரஜினி மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என நினைத்தாரோ அவற்றையெல்லாம் செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், ரஜினிகாந்தை விரைவில் நேரில் சந்திப்பேன் என்றும் முக அழகிரி தெரிவித்துள்ளார்.

தற்போது திமுகவில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கும் அழகிரி, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக டெபாசிட் இழந்ததையும், திமுகவின் செயல்தலைவர் சரியில்லை என்றும் கடுமையாக தாக்கியிருந்தார்.

இந்நிலையில், அவர் ரஜினியை சந்திப்பேன் என்று கூறியிருப்பது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.