டெல்லி: சத்தீஸ்கர் மற்றும் பஞ்சாப் மாநில முதல்வர்களுடன் இன்று லக்கிம்பூர் செல்வேன் என்று கூறிய  ராகுல்காந்தி, விவசாயிகள் பிரச்சினையில் நாங்கள் அரசியல் செய்யவில்லை; நியாயம் தான் கேட்கிறோம் என்று கூறினார்.

லகிம்பூர் கேரி வன்முறையைத்தொடர்ந்து, உ.பி.க்கு செல்ல வெளிமாநிலத்தவர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், அங்கு ராகுல்காந்தி உள்பட  5 பேர் கொண்ட குழு இன்று செல்வதாக இருந்தது. ஆனால், மாநில அரசு விதித்துள்ள தடை காரணமாக, ராகுல்காந்தி அங்கு செல்வதில் சிக்கல் எழுந்துள்ளது.

இந்த  பரபரப்பான  சூழலில் ராகுல் காந்தி செய்தியாளர்களை இன்று காலை சந்தித்து பேசினார். அப்போது, பிரதமர் மோடி லக்னோ சென்றவர் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறவில்லை என்று கண்டித்ததுடன், விவசாயிகள் மீது ஜீப்பை ஏற்றி நசுக்கி கொள்ளப்பட்டு இருக்கிறார்கள். கொல்லப்பட்ட விவசாயிகளின் பிரேத பரிசோதனை முறையாக நடத்தப்படவில்லை. இந்த வன்முறையில் தொடர்புடைய மத்திய அமைச்சரின் மகன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது நம் நாட்டு விவசாயிகள் மீதான திட்டமிட்ட தாக்குதல் இது என குற்றம் சாட்டினார்.

இகங்காரத்தின் காரணமாக விவசாயிகளின் கோரிக்கையை மத்தியஅரசு நிராகரித்து வருவதாக கூறியவர். விவசாயிகளின் பலத்தை மத்திய,  மாநில அரசுகள் உணர்ந்து கொள்ளவில்லை. என்னையும் என் குடும்பத்தினரையும் துன்புறுத்தினாலும் நாங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்போம் என்றார்.

இந்த விவகாரத்தில்,  காங்கிரஸ் அரசியல் செய்யவில்லை; இறந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு நியாயம் தான் கேட்கிறோம். ஜனநாயக முறையிலான போராட்டங்களை ஒடுக்குவதற்கு ஒரு எல்லை உள்ளது. ஒடுக்குமுறை தீவிரமடைந்தால் ஆட்சியாளர்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பெரும் கிளர்ச்சி வெடிக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்ததுடன்,  நான் லக்கிம்பூர் செல்வதை தடுக்க முடியாது என்றும், இன்று சத்தீஸ்கர் மற்றும் பஞ்சாப் மாநில முதல்வர்களுடன் லக்கிம்பூர் செல்வேன் என்றார்.

லக்னோ மற்றும் லகிம்பூர் கேரி  பகுதியில் 144 தடை அமலில் உள்ளதால் 5 பேர் செல்ல முடியாது, அதனால் நாங்கள் 3 பேர் செல்வோம், உ.பி. அரசு,  சர்வாதிகார போக்கை ஒன்றிய அரசு கைவிட்டு ஜனநாயக முறையில் நடந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.