ஈரோடு:

தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகனை தோற்கடிப்பேன் தமிழக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உறுதியாக தெரிவித்து உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்ததில் ஏப்ரல் 18ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  திமுக, அதிமுக கூட்டணிகள் சார்பாக வேட்பாளர்கள் களத்தில்உள்ளனர். இந்த தேர்தலில் மிகவும் எதிர்பார்க்கப்படும் தொகுதியாக தேனி தொகுதி மாறி வருகிறது.

இந்த தொகுதியில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் மகன் ரவீந்திர நாத் களமிறங்கி உள்ளார். அவரை எதிர்த்து, அதிமுகவில் இருந்து பிறந்த டிடிவி தினகரன் அணி சார்பில் முன்னாள் ஆண்டிப்பட்டி தொகுதி எம்எல்ஏ தங்கத்தமிழ்செல்வன் களமிறங்கி உள்ளார். அதே வேளையில் திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

இதன் காரணமாக தேனி  தொகுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 3 வேட்பாளர்களும் நாங்கள்தான் ஜெயிப்போம் என்று மார்தட்டிக்கொண்டு கோதாவில் இறங்கி உள்ளனர். வெற்றி பெறப்போவது யார் என்பது அடுத்த மாதம் 23ந்தேதி தெரிய வரும்…

இந்த நிலையில்,காங்கிரஸ் கட்சியை தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், நான்தான் வெற்றி பெறுவேன் என்று சவால் விடுத்து கூலாக கூறி வருகிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்..

செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன்,  என்னை எதிர்த்து போட்டி போடுபவர்களை நான் போட்டியாகவே கருதுவதில்லை. என்னைப் பொறுத்த வரையில் நான் சுடுகாட்டில் தியானம் செய்து அரசியல் செய்பவனல்ல அல்லது கிளி ஜோசியம் பார்த்து அரசியல் செய்பவன் அல்ல நல்ல மக்களின் குறைகளை அறிந்து அதை தீர்ப்பதற்காக பாடுபடுகின்ற ஒரு அரசியல்வாதியாக இருக்கிறேன் என்றவர்,  எனது 50 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் கறைபடாத கரங்களுக்கு சொந்தக்காரனாக இருந்து வருகிறேன் என்று தன்னிலை விளக்கம் தந்தார்.

என்னை தேனி தொகுதியில்  போட்டியிட வேண்டும் என்று தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டி ருக்கிறார். நான் கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என்றவர், .தனது தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை   கூட்டணி கட்சி  தலைவர்களை சந்தித்து அவர்களுடைய ஆலோசனைக்கு பின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறேன் என்று கூறினார்.

மேலும், தான் ஏற்கனவே முதல்வர்  ஜெயலலிதாவையே சந்தித்தவன்…..என்று கூறியவர்,  ஜெயலலிதாவை நான் விமர்சித்து இருந்தாலும் அவர் ஒரு பெண் சாதனையாளர் என்றும், அவரை ஒருமையில் விமர்சித்தது கிடையாது என்றும், மோடியின் மீது மக்கள் கோபத்தில் இருப்பதால் பாஜக கூட்டணி தோற்கும் என்றார்.

தேனி தொகுதியில் வெற்றி பெற முடியுமா என்ற கேள்விக்கு,  தேனி தொகுதி வேட்பாளர்களை நான் பெரிய போட்டியாக கருதவில்லை என்றவர், துணை முதல்வரான ஓபிஎஸ்சை கண்டு நான் ஏன் பயப்படப்போகிறேன்…  அவர்களுடைய இடத்திலேயே வைத்தே அவர்களைதோற்கடித்து வெற்றி பெறுவேன்..

இவ்வாறு ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.