சென்னை:

தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பேரனும், செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில் விஜய், த்ரிஷா நடித்த குருவி படத்தை தயாரித்தார். தொடர்ந்து சில படங்களைத் தயாரித்த இவர், 2009ம் ஆண்டில் ஆதவன் திரைப்படத்தில் சிறு வேடத்தில் நடித்தார்.

பிறகு 2012ம் ஆண்டு, “ஒரு கல் ஒரு கண்ணாடி” திரைப்படத்தில் நாயகனாக நடித்தார். தொடர்ந்து திரைப்படங்க ளில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது:

“நான் திரைத்துறைக்கு வருவதற்கு முன் தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தேன். மறைந்த முரசொலி மாறன் உட்பட பலருக்கு தி.மு.க. சார்பாக தேர்தலில் வாக்கு சேகரித்திருக்கிறேன்.

திரைத்துறைக்கு வந்த பிறகு அரசியலில் முழுமையாக ஈடுபடமுடியவில்லை. தற்போது நடிகர்கள் பலர், அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். நானும் இனி அரசியிலில் தீவிரமாக ஈடுபடப்போகிறேன். இதுதான் அதற்கு சரியான நேரம்” என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.