விராலிமலை:
விராலிமலை அதிமுக எம்.எல்.ஏ. விஜய பாஸ்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசும் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் தமிழகத்தில் 25 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் 1,44,948 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில்,24898 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 12,97,500 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குணமடைந்து 21,546 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரையில், 11,51,058 பேர் வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பால் நேற்று 195 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 21,546 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 6,678 பேருக்கும், செங்கல்பட்டில் 2039 பேருக்கும், கோயம்புத்தூரில் 2068 பேருக்கும், திருநெல்வேலியில் 688 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக விராலிமலை அதிமுக எம்.எல்.ஏ. விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவர், தன்னை தானேவீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமை படுத்திக்கொள்ளுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.