சென்னை

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைக் கைது செய்யாதது தமக்கு இன்னும் வருத்தமாக உள்ளதாக திமுக எம்பி தயாநிதி மாறன் கூறி உள்ளார்.

நகர்ப்புற ஊராட்சித் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது.  இதையொட்டி நேற்று அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டனர்.   திமுக சார்பில் நடந்த பிரச்சாரக் கூட்டங்களில் முந்தைய அதிமுக அரசின் ஊழல்கள் குறித்து அதிகம் பேசப்பட்டன.

நேற்று சென்னை துறைமுகம் பகுதியில் மத்திய சென்னை மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் பிரசாரம் செய்தனர்.  அப்போது தயாநிதி மாறன் செய்தியாளர்களைச் சந்தித்து கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

தயாநிதி மாறனிடம் செய்தியாளர்கள், “இதுவரை தமிழக அரசு எதுவுமே செய்யவில்லை என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறி வருகிறாரே” என கேட்டனர்.  அதற்கு அவர். ”எனக்கும் ஊழல் செய்த எடப்பாடி  பழனிசாமியை இன்னும் தமிழக அரசு கைது செய்யாதது வருத்தமாக உள்ளது” எனப் பதில் அளித்தார்.