டில்லி:

பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் முறைகேட்டில் தொடர்புடைய நிரவ் மோடியின் மாமா மெகுல் சோக்சி சிபிஐ.க்கு கடந்த 16ம் தேதியிட்ட ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.

அதில்,‘‘ நான் ஆதரவின்றி இருக்கிறேன். தற்போது நடந்து வரும் விசாரணை குறித்து எனக்கு எந்த தகவலும் எனக்கு தெரியவில்லை. எனக்கு பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளது. இதன் மீது எழுந்த அச்சம் காரணமாக தான், நான் எதற்கும் பதிலளிக்க முடியாத நிலை ஏற்பட்டது’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அதில், ‘‘பல்முனை விசாரணை முகமைகள் மேற்கொண்ட நியாயமற்ற நடவடிக்கைகளால் நான் உதவியற்று நிற்கிறேன். இதனால் என்னை தற்காத்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது குறித்து மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் எனக்கு எந்த தகவலையும் அளிக்கவில்லை. இனிமேல் நான் இந்தியா வராமல் இருப்பதற்கு எவ்வித காரணமும் கூறமாட்டேன்.

நான் தொழில் ரீதியாக உறவு வைத்திருந்த தனிநபர்கள் மூலம் நானும், எனது குடும்பத்தாரும் தனிப்பட்ட முறையில் மிரட்டப்பட்டு வருகிறோம். எனது தொழில் ரீதியாக நான் அதிகப்படியாக வெளிநாட்டில் முடங்க்கப்பட்டுள்ளேன். எனது உடல் நிலை சரியில்லாதது தான் இந்தியா வர இயலாததற்கு காரணம். மீடியாக்கள் தொடர்ந்து தாங்களாகவே செய்தி வெளியிடுகிறது. ஒவ்வொரு விஷயத்திலும் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுகிறது. ’’ என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக சிபிஐ அனுப்பிய சம்மனுக்கு கடந்த 8ம் தேதியிட்ட ஒரு கடிதத்தை சோக்சி எழுதியுள்ளா£ர். அதில், தனது உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தன்னால் நேரில் ஆஜராக இயலாது என்று தெரிவித்திருந்தார். இது 7ம் தேதிக்கு முன்னதாக நேரில் ஆஜராக வேண்டும் என்று சிபிஐ அனுப்பிய சம்மனுக்கு பதிலாகும்.

பிப்ரவரி முதல் வாரத்தில் இருதய சிகிச்சை பெற்றதாகவும், அதனால் பயணம் செய்ய இயலாது என்றும் குறிப்பிட்டிருந்தார். சோக்சி எங்கே தங்கி இருக்கிறார் என்ற விபரம் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. இ.மெயில் மூலமும், இந்தியாவில் உள்ள எனது வக்கீல் மூலமும் தன்னை தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.