ஈராக்கில் பயங்கரவாதிகளிடம் சிக்கிய 39 இந்தியர்களும் கொல்லப்பட்டு விட்டனர் என கடந்த மூன்று ஆண்டுகளாக வருடங்களாக தான் கூறி வந்ததாக, பயங்கரவாதிகளிடமிருந்து  தப்பி வந்த ஹர்ஜீத் மசீ இன்று தெரிவித்துள்ளார்.

ஈராக்கில் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த 40 இந்தியர்கள் கடந்த 2015ம் வருடம் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டனர்.  அவர்களில் ஒருவர் வங்காளதேசத்தைச் சேர்ந்த இஸ்லாமியர் என்று சொல்லி தப்பித்துவந்துவிட்டார்.

இந்த நிலையில் 3 வருடங்களுக்கு முன் கடத்தப்பட்ட இந்தியர்கள் 39 பேரும் கொல்லப்பட்டு விட்டதாக மத்திய வெளிவிவகார துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று நாடாளுமன்ற மேலவையில் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதிகளிடம் இருந்து தப்பி வந்த ஹர்ஜீத் மசீ என்பவர் பஞ்சாபில் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள கலா ஆப்கானா கிராமத்தில் வசித்து வருகிறார்.

அவர் இன்று, “ 39 இந்தியர்களும் ஐ.எஸ்.ஐ.எஸ்.  பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டு விட்டனர் என கடந்த மூன்று ஆண்டுகளாக வருடங்களாக நான் கூறி வருகிறேன். ஆனால் நான் சொன்னதை இந்திய அரசு பொருட்படுத்தவில்லை” என்றார்.

மேலும், “தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த இந்தியர்களான எங்களை பயங்கரவாதிகள் கடத்தினர்.  அவர்களது பிடியில் சில நாட்கள் வைத்திருந்தனர்.  ஒரு நாள் எங்களை மண்டியிட செய்து துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.  எனது தொடையில் குண்டு ஒன்று பாய்ந்தது.  இதனால் நான் சுயநினைவற்று விழுந்தேன். அதன்பின்னர் அங்கிருந்து தப்பி இந்தியா வந்தேன்” என்றார்.