மதுரையில் மனிதக் கழிவு அகற்றுவோர் வாழ்வுரிமை கருத்தரங்கத்தில் கலந்துகொண்டார்  திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித். பிறகு செய்தியாளர்களிடம்  பேசிய அவர், “மனிதக் கழிவுகளை மனிதர்களே கையால் அள்ள, இந்திய நாட்டு சட்டம் அனுமதிக்கவில்லை. ஆனால் அந்த சட்டத்தை அரசாங்கம் இதுவரையிலும் நடைமுறைப்படுத்தவில்லை என்பது வேதனை.
பணமில்லா பரிவர்த்தனை, கறுப்புப் பண ஒழிப்பு என்றெல்லாம் பேசுகிறார்கல். டிஜிட்டல் இந்தியா என்கிறார்கள்.  ஆனால் மனித கழிவை மனிதர் அள்ளுவது தொடர்கிறது.
இந்த காலகட்டத்தில் நாம் முதலில் மனித மனங்களில் உள்ள அழுக்கை அகற்றவதை பற்றி யோசிக்க வேண்டும்.
இந்தியாவைப்பற்றி பேசும்போது, இந்தியா கலாச்சாரத்தில் சிறந்த நாடு, பண்பாட்டில் சிறந்த நாடு என பெருமையாக பேசுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை இந்தியா ஒரு வெட்கம் கெட்ட நாடு என்றுதான் சொல்வேன்.
இது நாகரீகமற்ற நாடு. மனிதனை மனிதனாக பார்க்காத நாடு. இங்கு சமூக நீதியை எதிர்பார்த்தால் எப்படி கிடைக்கும்.? அரசாங்கம் தானே நம்மை இழிவான வேலையை செய்யும்படிச் சொல்கிறது.
இந்த ஆண்டில் மட்டும் 26 பேர் பாதாள சாக்கடையில் இறங்கி,  மரணமடைந்திருக்கிறார்கள். வர்களில் எத்தனை இளைஞர்கள் அவர்களின் கனவுகள் அழிந்து போனதே…  இந்த நிலை தொடர வேண்டுமா?
இந்த விஷயத்தில் ஊடகங்கள் கூட மவுனம் சாதிக்கிறது. மனிதக்கழிவை அகற்றுவோர்க்கு மறுவாழ்வு அளிக்கும் சட்டத்தை அரசே அமல்படுத்த மறுக்கிறது. இதைப்பற்றி நாம்தான் பேசுகிறோம். வேறு யாராவது பேசுகிறார்களா? தனித்தொகுதியில் வெற்றி பெற்று சென்றவர்கள் யாராவது இதைப்பற்றி பேசினார்களா? இதை யாரும் பேச மாட்டார்கள்.
சாப்பாட்டிற்காகத்தானே இந்த வேலையை செய்கிறோம். இந்த வேலையை செய்து சாவதை விட, சாப்பிடாமல் செத்துப்போகலாம். ஆம், இந்த வேலையை செய்ய மாட்டோமென்று எல்லோரும் ஒருநாள் இருந்து பாருங்கள். அப்போதுதான் இதுக்கு முடிவு வரும்.
ஒரு திருமணம்,  திருவிழா என்றால் சாதியாக ஒன்றாக சேருகிறீர்கள்.  ஆனால் இந்த இழிவான வேலையை செய்ய மாட்டோமென்று சொல்ல ஏன் ஒன்றாக திரள மறுக்கிறீர்கள். இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இப்படியே அறிவற்றவர்களாக அடிமைகளாக இருக்க போகிறீர்கள்.
இங்கு நீதியை எதிர்பார்க்காதீர்கள். இந்த நாடு மாட்டை தெய்வமாக்கி மனிதனை அடிமையாக நினைக்கும் நாடு. இங்கு நீதி கிடைக்காது.
நாம் சுய உணர்வுள்ளவர்களாக மாற வேண்டும். நீங்கள் இந்த வேலையை மறுக்க ஏன் அஞ்சுகிறீர்கள், அடிப்பார்கள் என்றா? அடித்தாலும் பரவாயில்லை. அடி வாங்குங்கள் ஆனால், இந்த வேலையை மட்டும் செய்யாதீர்கள்.
நம்முடைய கனவுகளை லட்சியங்களை அடைய இடையிலுள்ள தடைக் கற்களை உடைக்க வேண்டும் என்று அம்பேத்கார் சொன்னார். ஒவ்வொரு முறையும் நம்மை காப்பாற்ற இயேசு வருவார், அம்பேத்கார் வருவார் என்று எதிர்பார்க்கக்கூடாது.
நம்முடைய பசிக்கு எப்படி நாம் உணவு சாப்பிடுகிறோமோ, அதுபோல் நம்மீதான இழிவுகளைக் களைய நாம்தான் முடிவெடுக்க வேண்டும். அடுத்த தலைமுறைக்கு இந்த வேலையை விட்டு செல்ல வேண்டாம். இவை இன்றோடு போகட்டும். மகிழ்ச்சி”. என்றார்.

பா.ரஞ்சித்

மேலும், ” பணமில்லா பரிவர்த்தனை என்று “டிஜிட்டல் இந்தியா” என்ற முழக்கத்துடன், 500, 1000 ரூபாய் நோட்டுக்களை பிரதமர் மோடி தடை செய்ததும், இந்த நடவடிக்கையை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி, “புதிய பாரதம் பிறந்தது” என்று புகழ்ந்ததும் குறிப்பிடத்தக்கது.
நடிகர் ரஜினிகாந்தை வைத்து, பா.ரஞ்சித் இயக்கிய கபாலி திரைப்படம், சமீபத்தில் வெளியானது என்பது இன்னொரு குறிப்பிடத்தக்கது.