சென்னை: மெட்ரோ நகரான சென்னையில், 6 நவீன டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் ஆன்லைனில் கிடைக்கிறது. ஆன்லைனில் எப்படி மதுவாங்குவது என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளன.
கொரோனா தாக்கம் அதிகம் உள்ள தமிழகத்தில் சில தளர்வுகளின் அடிப்படையில் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில் ஒன்று டாஸ்மாக் கடைகளை திறப்பது என்பதாகும்.
மே 7ம் தேதி முதல் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால், இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. இதையடுத்து, டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட நீதிமன்றம், ஆன்லைனில் மது வாங்கலாம் என்று கூறியது.
இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந் நிலையில் ஆன்லைனில் தமிழகத்தில் மதுபானங்களை எப்படி வாங்கிக் கொள்வது? என்ன நடைமுறைகளை பின்பற்றலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.
1.உங்கள் மொபைலில் பிளே ஸ்டோர் பகுதிக்குச் சென்று டாஸ்மாக் ஆப் என்ற செயலியை (tasmac.co.in) பதிவிறக்கம் செய்யுங்கள்.

  1. உங்கள் பெயர், பாலினம், பிறந்த தேதி, உங்கள் மொபைல் எண், முகவரி மற்றும் அஞ்சல் ஐடியுடன் பதிவு செய்யுங்கள்.
  2. நீங்கள் பதிவுசெய்ததும், விருப்பமான ரகசிய குறியீடு எண்ணை உள்ளிட்டு அதை உறுதிப்படுத்தவும்.
  3. ஆதார் அட்டையின் எண்ணையும், மேலும் கோரப்பட்ட தகவல்களையும் உள்ளீடு செய்யவும். உங்களுக்கு விருப்பமில்லை என்றால் இந்த படிநிலையை தவிர்த்துவிடலாம்.
  4. ஆர்டர் செய்ய விருப்பமான மதுபான தயாரிப்புகளை தேர்வு செய்யவும். பின்னர் பணத்தை (Add money) செலுத்தவும். ஆர்டர் செய்யப்பட்ட பானங்களுக்கான கட்டணத்தை “ஃபாஸ்ட் பே”( Fast Pay) மூலம் செலுத்தலாம். பின்னர் நீங்கள் QR குறியீட்டை பெறுவீர்கள். TASMAC ஊழியர்களின் செல்போன்களில் நீங்கள் அளித்த தரவுகள் அனைத்தும் பதிவு செய்யப்படும், QR ஐ ஸ்கேன் செய்வதன் மூலம், ஆர்டர் செய்யப்பட்ட மதுபானங்கள் உங்களுக்கு விநியோகம் செய்யப்படும்.

டாஸ்மாக் ஆன்லைன் டெலிவரியானது, சென்னை மெட்ரோ நகரத்தில் உள்ள 6 நவீன டாஸ்மாக் கடைகளில் கிடைக்கிறது. விரைவில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் இந்த வசதியை பெறும்.