சென்னை: பத்மஸ்ரீ சின்னப்பிள்ளைக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.  சின்னபிள்ளைக்கு மத்தியஅரசு உதவிகளை வழங்காமல் கைவிட்டது தெரிய வந்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு கைகொடுத்துள்ளது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயி தலைமையிலான பாஜக ஆட்சி காலத்தில்,  கடந்த 2000-ஆம் ஆண்டில் ‘ஸ்திரிசக்தி’ புரஸ்கார் விருது பெற்றவர் மதுரையை சேர்ந்த பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை. இவருக்கு  பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் தனக்கு வீடு வழங்கப்படும் என சொல்லப்பட்டது – ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை.

இதுகுறித்து, சின்னப்பிள்ளை சமீபத்தில் கொடுத்திருந்த பேட்டி ஒன்றில் மத்திய அரசு சார்பில் தனக்கு வீடு வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இதுவரை வீடு வழங்கப்படவில்லை என வேதனையுடன் தெரிவித்திருந்தார்.

இந்த செய்தி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டப்பட்டது. இதையடுத்து,   சின்னப்பிள்ளைக்கு உடனடியாக வீடு வழங்க மதுரை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்

பத்மஸ்ரீ சின்னப்பிள்ளைக்கு புதிதாக வீடு வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட ஆட்சியரை அறிவுறுத்திய முதலமைச்சர் ஸ்டாலின், ஏற்கனவே அரசால் வழங்கப்பட்டுள்ள ஒரு செண்ட் வீட்டு மனையுடன், திருவிழாப்பட்டி கிராமத்தில் கூடுதலாக 380 சதுர அடி நிலத்திற்கான பட்டா வழங்கப்பட உள்ளதாகவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,  முன்னாள் இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயி அவர்களிடம் கடந்த 2000-ஆம் ஆண்டில் “ஸ்த்ரிசக்தி” புரஸ்கார் விருது பெற்றவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பத்மஸ்ரீ சின்னப் பிள்ளை அவர்கள். அவர் சமீபத்தில் செய்தி ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் தனக்கு வீடு வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை என்று வேதனையுடன் தெரிவித்து இருந்தார்.

இந்த செய்தியினை கேள்விப்பட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக பத்மஸ்ரீ திருமதி சின்னப் பிள்ளை அவர்களுக்கு புதியதாக வீடு வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அறிவுறுத்தினார். இதன்படி பத்மஸ்ரீ சின்னப் பிள்ளை அவர்களுக்கு ஏற்கெனவே அரசால் வழங்கப்பட்டுள்ள ஒரு செண்ட் வீட்டு மனையுடன் பில்லுச்சேரி ஊராட்சி, திருவிழாப்பட்டி கிராமத்தில் கூடுதலாக 380 சதுர அடி நிலத்திற்கான பட்டா வழங்கப்படுகிறது.

மேலும், இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் பத்மஸ்ரீ திருமதி சின்னப் பிள்ளை அவர்களுக்குப் புதிய வீடு வழங்கப்படுகிறது. வீடு கட்டும் பணி இந்த மாதமே தொடங்கப்படும் என கூறியுள்ளார்.