டில்லி

பிரபல இந்தி நடிகரான ராஜ்குமார் ராவ் தேர்தல் ஆணைய விளம்பர தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியத் தேர்தல் ஆணையம் வாக்காளர்களை வாக்களிக்க ஊக்குவிக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்களை தேர்தல் விழிப்புணர்வின் அடையாள சின்னமாக (விளம்பர தூதர்) அவ்வப்போது நியமிக்கிறது.

தேசிய அளவில் மற்றும் மாநில அளவில் நடைபெறும் இந்த நியமனத்தில் கிரிக்கெட் வீரர்கள் எம்.எஸ்.தோனி, நடிகர் அமீர்கான், சமூக சேவகி நிருகுமார், பாடகர் ஜஸ்பீர் ஜசி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். கடந்த ஆகஸ்ட் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மாதம் நியமிக்கப்பட்டார்.

தமிழகத்தின் தேர்தல் விளம்பர தூதர்களாக நடிகர்கள் நிழல்கள் ரவி, ரோபோ சங்கர், பாடகி சித்ரா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது  நடைபெற உள்ள 5 மாநில தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்காகத் தேர்தல் ஆணைய விளம்பர தூதராகப் பிரபல இந்தி நடிகர் ராஜ்குமார் ராவ் நியமிக்கப்பட்டு உள்ளார். நேற்று டில்லியில் இவருக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் முன்னிலையில் கையெழுத்து ஆனது.

நடிகர் ராஜ்குமார் ராவ் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான நியூட்டன் திரைப்படத்தில் தேர்தல் அலுவலராக நடித்து இருந்தார். அவர் சத்தீஷ்கர் தேர்தல் களத்தில் பணியாற்றியதுபோல காட்சிகள் இருந்தன. இப்படத்துக்காக அவருக்கு பல்வேறு விருதுகள் கிடைத்தன. எனவே இவற்றை முன்னிலைப்படுத்தி அவரை தேர்தல் ஆணையம் நியமித்து இருப்பதாகக் கூறப்படுகிறது.