சென்னை: வருமான வரி வழக்கில் இருந்து காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரமும், அவரது மனைவி ஸ்ரீநிதியும் ரூ.7.37 கோடி வருமானத்தை மறைத்ததாக வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது. முட்டுக்காடு பகுதியில் உள்ள சொத்துக்களை விற்ற போது  கிடைத்த ரூ.7.37 கோடியை கணக்கில் காட்டவில்லை என்பது அவர்களின் குற்றச்சாட்டாகும்.

எம்பி, எம்எல்ஏக்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கில் இருந்து விடுவிக்குமாறு கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கில் வாதப் பிரதிவாதங்கள் முடிந்த  நிலையில், உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகிய இருவரையும் வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பளித்தது. வருமான வரி மதிப்பீட்டு நடைமுறைகள் முடிக்கும் முன்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக நீதிமன்றம் தீர்ப்பில் கூறி உள்ளது.