சென்னை: தமிழகம் முழுவதும் 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 50 இடங்களில் ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அனுமதி  கோரியிருந்த நிலையில், காவல்துறை சட்டம் ஒழுங்கு என காரணம் காட்டி 3 இடங்களில் மட்டுமே அனுமதி வழங்குவதாக கூறியது. ஆனால், தற்போது நீதிமன்றம் 44 இடங்களில் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே  ஆர்எஸ்எஸ் பேரணி  அக்டோபர் 2-ம் தேதி  நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக கூட்டணி கட்சியினரின் எதிர்ப்பு மற்றும் எதிர் போராட்டம் காரணமாக, காவல்துறை அனுமதி வழங்க மறுப்பதாக அறிவித்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றமும், ஆர்எஸ்எஸ் பேரணி மாற்றி வைக்குமாறு அறிவுறுத்தினார். அதன்படி அக்டோபர் 6ந்தேதி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கிய உயர்நீதிமன்றம், இதுகுறித்து காவல்துறை முடிவு செய்து அனுமதி வழங்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.

இநத் வாக்கு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வருவதற்கு முந்தைய நாளில்,  ஆர்எஸ்எஸ் பேரணிக்கு காவல்துறை அனுமதி வழங்குவதாக டிஜிபி அறிவித்தார். ஆனால்,  நேற்று முன்தினம் நடைபெற்ற விசாரணையின்போது, 3 இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாகவும், மற்ற இடங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்ளதாகவும் பல்டி அடித்தது. அதாவது, 23 இடங்களில் உள்ளரங்கு கூட்டமாக நடத்திக்கொள்வதாக இருந்தால் அவற்றிற்கு அனுமதி வழங்க காவல் துறை தயாராக உள்ளது. ஆனால், எஞ்சியுள்ள 24 இடங்களில் அனுமதி வழங்க இயலாது. மேலும், பல இடங்களில் கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதால் வருவாய் துறை மற்றும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டி உள்ளது, அதனால் பாதுகாப்பு வழங்க முடியாது என கைவிரித்தது.

அப்போது ஆர்எஸ்எஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாநிலத்தின் பாதுகாப்பு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்” என்று வாதிடப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்தது தொடர்பாக உளவுத் துறை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன், அந்த அறிக்கையை பார்த்த பிறகு 47 இடங்களில் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து உத்தரவு பிறப்பிப்பதாக கூறி விசாரணையை 4ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு  விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “காவல் துறை மூடி முத்திரையிட்டு தாக்கல் செய்த உளவுத்துறை அறிக்கைகள் முழுமையாக ஆராயப்பட்டன. கடந்த ஆண்டுகளில் நிகழ்ந்த குற்றச் சம்பவங்களையும், வழக்கு களையும்தான் காவல் துறை சுட்டிக்காட்டியுள்ளது. புதிய வழக்குகள் எதையும் குறிப்பிடப்படவில்லை.

எனவே, கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பல்லடம், அருமனை, நாகர்கோவில் ஆகிய இடங்களைத் தவிர மற்ற இடங்களில் அனுமதி வழங்கலாம்” என்று உத்தரவிட்டார். மேலும், இந்த 6 இடங்களைத் தவிர காவல் துறை ஏற்கெனவே அனுமதி வழங்கியிருந்த 3 இடங்களுடன் சேர்த்து 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்தலாம். உள்ளரங்கு கூட்டமாக பரிந்துரைக்கப்பட்ட இடங்களில் அரங்குகளில் இல்லாமல் விளையாட்டு திடல்களை தேர்வு செய்யலாம் என்று உத்தரவிட்டார்.

அத்துடன், தற்போது அனுமதி வழங்கப்படாத 6 இடங்களில் மட்டும் இயல்பு நிலை திரும்பும்வரை ஆர்எஸ்எஸ் காத்திருக்க வேண்டும் எனவும், இந்த இடங்களில் 2 மாதங்களுக்கு பிறகு ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி கோரி புதிதாக மனு அளிக்கலாம் என்று நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.