சென்னை: அதிமுக பெயர்,கொடி,சின்னத்தை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி ஓபிஎஸ் மனு ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், ஓபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்து பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். இவரும், ஓ.பன்னீர்செல்வமும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை எடப்பாடி பழனிசாமி கட்சியை விட்டு நீக்கினார்.

இதனையடுத்து ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும்  உச்சநீதிமன்றத்தில் அடுத்தடுத்து வழக்குகளை தொடர்ந்தார். ஆனால், அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்திய தேர்தல் ஆணையமும் எடப்பாடி பழனிச்சாமியை  அதிமுக பொதுச்செயலாளராக அங்கரீத்து விட்டது. இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அதிமுகவை வழிநடத்தி வருகிறார் .

இதனால் விரக்தியில் உள்ள ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியின் சின்னம், கொடி, லெட்டர்பேடு ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும், அதற்கு தடை விதிக்கக்கோரியும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2023ம் ஆண்டு  மனுத்தாக்கல் செய்யப்பட்டது.  மனுவில், ஓபிஎஸ்,  அதிமுக தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து,   அதிமுக கொடி ,சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு  வழக்கு தொடர்ந்து,  இந்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வில் வந்தது. அப்போது தகுதி நீக்கம் அடிப்படையில் தனி நீதிபதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் தங்கள் தரப்பு வாதங்களைக் கேட்காமலேயே இடைக்கால தடை விதித்தது தவறு எனவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் ஓபிஎஸ் தரப்பை குற்றம் சாட்டி வாதம் முன்வைக்கப்பட்டது.

இருதரப்பு வாதத்தையும் கேட்ட ஓபிஎஸ் தரப்பினருக்கு பல கேள்விகளை முன்வைத்தனர். தொடர்ந்து  இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. இதனையடுத்து உயர்நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் ஹெட் ஆகியவற்றை பயன்படுத்தமாட்டோம் என ஓபிஎஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதன் பின்னர் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வு பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளது.

அதிமுக பெயர்,கொடி,சின்னத்தை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி ஓபிஎஸ் மனு தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதிகள்,  ஓபிஎஸ் தரப்பு, தனி நீதிபதி முன் உரிய மனு தாக்கல் செய்யலாம் என உத்தரவிட்டு உள்ளது.