நெல்லை: தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று (ஜன.9) பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் மழை கொட்டி வருகிறது தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

‘இந்த நிலையில்,  தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதையொட்டி, ஆற்றங்கரையோர மக்களுக்கு தூத்துக்குடி கலெக்டர் லட்சுமிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 வடதமிழக கடலோரப் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை(ஜன.9) தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யக்கூடும் என அறிவித்தது. அதன்படி நேற்று நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறத.

மேலும், நாளை ஜன.10) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும். வியாழன் முதல் சனிக்கிழமை (ஜன.11-13) வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான முதல் பலத்த மழை பெய்யக்கூடும என்றும்,  மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், பலத்த மழை காரணமாக தாமிரபணிக்கு வரும் நீரில் அளவு அதிகரித்துள்ளது.  தாமிரபரணி ஆற்றில் சுமார் 1½ லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணி கரையோர மக்களுக்கு  தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லெட்சுமிபதி எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில் , கனமழை எச்சரிக்கை உள்ளதாலும், நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் மழையாலும், தாமிரபரணி ஆற்றில் அதிகபடியான மழைநீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையோரங்களில் உள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், உப்பாற்று ஓடை கரையோர பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த மழை, வெள்ளத்தால் பெரும் பாதிப்பு அடைந்த நிலையில். அதிலிருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில்,  இன்று மீண்டும்  கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தென் மாவட்டங்களில் இன்று முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி இன்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் தண்ணீர் பாய்ந்து ஓடியது.  இன்று காலை முதலே வானம் மூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் காலை 8.30 மணி முதல் சாரலாக தொடங்கிய மழை பின்னர் பலத்த மழையாக பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் ஆகியோர் பயணம் செய்ய கடும் சிரமப்பட்டனர்.
ஏரலிலும் இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. உடன்குடி மற்றும் சுற்றுப்புறபகுதியான பரமன்குறிச்சி, குலசேகரன்பட்டினம், மணப்பாடு, மாதவன்குறிச்சி, கொட்டங்காடு, செட்டியாபத்து. லட்சுமிபுரம், மருதூர்கரை, பிச்சிவிளை, வட்டன்விளை, சீர்காட்சி ஆகிய பகுதிகளில் இன்று காலை முதல் மழை விட்டு விட்டு தொடர்ந்து பெய்தது.இதனால் முக்கியமான பஜார் சாலைகள், தெருக்களில் தண்ணீர் தேங்கியது.
 இதேபோல் மெஞ்ஞானபுரம், செம்மறிகுளம், வள்ளியம்மாள்புரம், நங்கைமொழி, மாநாடு மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இன்று காலை 9 மணியளவில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. சுமார் ½ மணி நேரம் பெய்த கன மழையால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
மெஞ்ஞானபுரம் அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள விஜிகுமரன்நகர் பகுதியில் தேங்கிய தண்ணீரை 3 மின் மோட்டார் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதே போல் ஷாலோம் நகரில வீடுகள் தண்ணீரில் மூழ்கி உள்ளது.
கடந்த மாதம் பெய்த கனமழையால் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து 25 நாட்கள் ஆகியும் சில இடங்களில் இயல்பு நிலை திரும்பாமல் சுமார் 100-க்கு மேற்பட்டோர் நிவாரன முகாம்களிலும், சிலர் தங்கள் உறவினர்கள் வீடுகளிலும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று திடீரென பெய்த கன மழையால் குடியிருப்பு பகுதிகளில் மேலும் கூடுதலாக தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் இந்த பகுதி மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.