சென்னை: காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 6 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியது முதலே சென்னை உள்பட  மாநிலம் முழுவதும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தற்போது உருவாகி உள்ள  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் மீண்டும் மழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம் அடைவதால், தமிழ்நாட்டில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு பரவலாக பழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது மேலும்,  தஞ்சாவூர், ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ,திருவாரூர், கடலூர், விழுப்புரம், சென்னை ,காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓடி இடங்களிலும் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

மேலும், அடுத்த இரு தினங்களில் ஆறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதுமே பரவலாக அடுத்த இரு தினங்களுக்கு கனமழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . அதன்படி,  திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், நீலகிரி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்கு சனிக்கிழமை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் அதி கனமழை வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

இன்று (10ந்தேதி)  வங்கக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (நவ.10) தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் சற்றே வலுப்பெற்று தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி அடுத்த 10 முதல் 12 வரை உள்ள தேதிகளில் நகரக்கூடும். இதன் காரணமாக  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை 11ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதி கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறுதினம் 12ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் அதி கனமழையும், கோவை, திருப்பூர், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருவள்ளுர், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.