மதுரை: மதுரை அருகே பட்டாசு ஆலையில் நடைபெற்ற வெடிவிபத்தில் 5 பேர் உடல்சிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் பட்டாசு ஆலையில் ஏற்படும் வெடிவிபத்து நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது. இதை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், விபத்துகள் நடைபெறுவது தொடர்கிறது. இந்த நிலையில்,  மதுரை மாவட்டம் அழகு சிறை கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டு பட்டாசு வெடித்து சிதறியதில் 5 பேர் உடல் சிதறி பலியாகி உள்ளனர்.

 

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகு சிறை கிராமத்தில் வழக்கம்போல் இன்று இயங்கி வந்த தனியார் பட்டாசு தயாரிப்பு தொழிற்சாலையில்  20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திடீரென அங்கு தீ விபத்து ஏற்பட்டு  பட்டாசு வெடித்து சிதறியது. அதில் பட்டாசு தயாரிக்கும் கட்டடம் தரைமட்டமாகியுள்ளது. இதில் 13க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதையடுத்து,   மதுரை, திருமங்கலம் பகுதி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். அப்போது, கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி 5 பேர் உடல் சிதறி இறந்து கிடந்தது தெரிய வ்நதது. அவர்கள் யார் என்பது குறித்து அடையாளும் காணும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் சிலரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.