சென்னை: சென்னையில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு பெய்து வந்த மழை, இன்று காலை முதல் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் சென்னை உள்பட  25 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 25ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதன்பிறகு அவ்வப்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்றி,  காற்றழுத்த தாழ்வுநிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலம் என அடுத்தடுத்து உருவாகி பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால், ஏரி குளங்கள் நிரம்பியதுடன், பயிர்களும் சேதமடைந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

இந்த நிலையில்,  தற்போது தெற்குவங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும் என்றும், இதன் காரணமாக தென்மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதனப்டி  நேற்று தூத்துக்குடி உள்பட  தென்மாவட்டங்களில் அதி கனமழை கொட்டி தீர்த்தது. திருச்செந்தூரில்  அதிக பட்ச மழை பெய்து வெள்ளம் கோவிலுக்குள் புகுந்தது.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மொத்தம் சென்னை  25 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூர்களுக்கும், 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 சென்னை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை முதல் மிதமான கனமழை பெய்து வருகிறது. அதன் எதிரொலியாக மாணவ, மாணவிகள் நலன் கருதி மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் சில மாவட்டங்களுக்கான பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படு கிறது.

மேலும் புதுச்சேரி, காரைக்காலில் இரண்டு நாட்கள் பள்ளி மற்றும் கல்லூரி இயங்காது என கல்வித்துறை அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று காலை முதலே தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர்மழை காரணமாகவும், சில மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.