சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட 15 மாவட்டங்களில் இன்னும் 3மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக  சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை முதல் விடிய விடிய விட்டு விட்டு கனமழை கொட்டித் தீர்த்தது. எனவே திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகி யுள்ளது. கும்மிடிபூண்டி, பொன்னேரி பகுதிகளில் தலா 10 சென்டிமீட்டர் மழையும் சோழவரம் 8, ஆவடி 5, ஊத்துக்கோட்டை, தாமரைப் பாக்கம் பகுதிகளில் தலா 4 பூந்தமல்லியில் 3 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

சென்னையில் இரவு பெய்த கனமழையால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. மழை நீர் தேங்கிய பகுதிகளில் மோட்டார் மூலம் நீர் வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நள்ளிரவு வரை சென்னை மேயர் பிரியா சென்னை சாலைகளில் வெள்ள நீர் அகற்றும் பணிகளை மேற்பார்வையிட்டார். தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் கனமழை காரணமாக இன்று ஒரு நாள் சென்னை, திருவள்ளூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டனர்.

இந்நிலையில் கனமழை காரணமாக மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவள்ளூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.