சென்னை: சென்னையில் கடந்த இரு நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில், சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரடி ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை உள்பட மாநிலம் முழுவதும் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாகி வலுவடைந்துள்ளது. இது புயலாக மாறும் வாயப்பு உள்ளதாகவும், இதனால்,  அடுத்த 5 நாள்களுக்கு மிக கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நேற்று(புதன்கிழமை) காலை முதல் மழை பெய்து வருகின்றது. நேற்று மாலை சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்ததில் பல பகுதிகளில் நீர் தேங்கியது. அவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், சென்னையில் மழை பாதிப்பு மற்றும் மழை நீர் அகற்றம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து சென்னை மேயர் பிரியா, ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.