சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 4 நாட்களுக்குத் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. 

நேற்று தெற்கு அந்தமான் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேற்கு வட மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வரும் 30-ம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. பிறகு இது வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 48 மணி நேரத்துக்குச் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.