சென்னை:
சென்னையில் மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள் உள்ள பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது என தி.நகர் ரங்கநாதன் தெருவில் ஆய்வு செய்த சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை மாநகராட்சியின் சார்பில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக சென்னையில் கரோனா வைரஸ் தொற்று வெகுவாக குறைந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க மருந்துகள் ஏதும் இதுவரை இல்லாத நிலையில் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் மற்றும் கைகளை சுத்தமாக அடிக்கடி சோப்பு கரைசல் கொண்டு சுத்தம்செய்தல் ஆகியவற்றின் மூலமே கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க முடியும்.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையின் முக்கிய வணிக வளாக பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகின்றது. வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகளுக்கு வரும் பொதுமக்களிடையே கொரோனா வைரஸ் தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னையில் தியாகராய நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, பாரிமுனை மற்றும் கோயம்பேடு ஆகிய பகுதிகளில் மாநகராட்சியின் சார்பில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய சிறுசிறு துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அந்தந்த மண்டல அலுவலர்களின் தலைமையில் சுகாதார கல்வி அலுவலர் மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்களுடன் இணைந்து கடந்த 3 நாட்களில் மட்டும் மாநகராட்சியின் சார்பில் சுமார் 1.5 லட்சம் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அங்காடி பகுதிகளில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய வில்லைகள் ஒட்டப்பட்டுள்ளன. மேலும் வணிக வளாக பகுதிகளில் 12 மூன்று சக்கர ஆட்டோக்கள் மூலம் ஒலிபெருக்கி வாயிலாகவும், 22 தற்காலிக பூத் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மாநகராட்சியின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத வணிக வளாகங்கள் மற்றும் முகக் கவசம் அணியாத தனி நபர்களிடமிருந்து இதுநாள் வரை ரூபாய் 3.16 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் நேரடியாக சென்று பொதுமக்களிடையே கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் வணிக வளாக பகுதிகளில் இருந்த பொதுமக்களுக்கு முகக்கவசங்களை வழங்கினார்.

‘பொதுமக்கள் வணிக வளாகங்களிலும் இதர அங்காடி பகுதிகளிலும் சமூக இடைவெளியை பின்பற்றி கரோனா வைரஸ் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்’ என சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், தெரிவித்துள்ளார்”.

இவ்வாறு சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.