ஸ்ரீவில்லிப்புத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே  உள்ள ஒரு சிற்றூரில் ஒரு அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளியில் சேரும் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.1000 அளித்துள்ளார்

தமிழகத்தில் பள்ளிகளைத் திறந்து மாணவர் சேர்க்கை, மாற்று சான்றிதழ் அளிக்கும் பணி, விலையில்லா பாடப்புத்தகம் அளித்தல் ஆகிய பணிகளைத் தொடங்க தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு இடப்பட்டிருந்தது.   அவ்வகையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள படிக்காசுவைத்தான்பட்டி என்னும் சிற்றூரில் அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடங்கியது.

நேற்று இந்த மாணவர் சேர்க்கை விழா பள்ளி மேலாண்மை குழு தலைவி மகேசுவரி தலைமையில் நடந்தது.    இந்த விழாவில் புதிதாக முதல் வகுப்பு சேர்ந்த 3 மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டது.   அவற்றுடன் தலைமை ஆசிரியர் ஜெயகுமார் தனது சொந்த பணத்தில் இருந்து புதிய மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கி உள்ளார்.   இது அந்த பகுதியில் பரபரப்பு ஆகி உள்ளது.

தலைமை ஆசிரியர் ஜெயகுமார், “அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க இந்த பள்ளியில் சென்ற ஆண்டு ஆண்டிராய்ட் மொபைல் போன்கள் வழங்கினேன்.  இந்த பள்ளியில் 5 ஆம் வகுப்பு வரை உள்ளது.  இந்த வருடமும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நேற்று முதல் வகுப்பு சேர்ந்த 3 மாணவர்களுக்கு தலா ரூ.1000 வழங்கினேன்.  மேலும் பள்ளியில் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் தலா ரூ.1000 வழங்க உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.